Regional03

சேலம் மாநகராட்சி சார்பில் மாணவர்களுக்கு போட்டி

செய்திப்பிரிவு

சேலம் மாநகராட்சி மற்றும் இந்திய மண்டல அலுவலகம் சார்பில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு பரிசுப் போட்டி அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக சேலம் மாநகராட்சி ஆணையர் ரவிச்சந்திரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

சேலம் மாநகராட்சி சார்பில் வீட்டில் உருவாகும் மக்கும் குப்பைகளை வீட்டிலேயே உரமாக்கும் திட்டத்தை பல்வேறு பகுதிகளில் பொதுமக்களின் ஒத்துழைப்போடு செயல்படுத்தி வருகிறது. இத்திட்டத்தை மேலும் சிறப்பாக மேற்கொள்ள மாநகராட்சி மற்றும் இந்தியன் வங்கியின் சேலம் மண்டலம் ஆகியவை சார்பில் போட்டி நடத்தப்படுகிறது.

இப்போட்டியில் மாநகராட்சிப் பகுதியில் உள்ள பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவிகள் பங்கேற்கலாம். மாணவ, மாணவிகள் தங்கள் வீட்டில் உருவாகும் மக்கும் குப்பைகளை உரமாக்க வேண்டும். மாடித் தோட்டம் அமைத்திருக்க வேண்டும். பிளாஸ்டிக் உபயோகமில்லாத வீடாக இருக்க வேண்டும். தங்கள் வீட்டில் மழைநீர் சேகரிப்பு அமைப்பு இருக்க வேண்டும். இந்த 4-ல் ஏதேனும் ஒன்றினை மாணவ, மாணவிகள் வீடுகளில் சிறப்பாக செய்திருத்தல் வேண்டும்.

போட்டியில் பங்கேற்க விரும்பும் மாணவ, மாணவிகள் bitly.com / salemcorp என்ற இணையதள முகவரியில் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து, சமர்ப்பிக்க வேண்டும். போட்டியில் தேர்ந்தெடுக்கப்படும் மாணவ, மாணவிகள் 200 பேருக்கு, தலா ரூ.5 ஆயிரம் மதிப்பில் மொத்தம் ரூ.10 லட்சம் மதிப்புள்ள சைக்கிள்கள் பரிசாக வழங்கப்படும்.

இதுதொடர்பாக மேலும் விவரங்களுக்கு www.salemcorporation.gov.in என்ற இணையதளம் மற்றும் வாட்ஸ்அப் எண் 99435 16516, திடக்கழிவு மேலாண்மை ஒருங்கிணைப்பாளர் பிரவீன்குமார் 85262 91167 மற்றும் சுகாதார அலுவலர்கள் 99763 92560, 98428 90099, 98426 99888, 75982 05707 ஆகிய செல்போன் எண்களில் தொடர்பு கொள்ளலாம் என்று தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT