வேளாண் பொறியியல் துறை மூலம் சூரிய சக்தியால் இயங்கும் சூரிய ஒளி மின்வேலி மானியத்தில் அமைக்க விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
இதுதொடர்பாக சேலம் ஆட்சியர் அ.ராமன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
தமிழகத்தில் தனிநபர் விவசாயிகளுக்கு விவசாய உற்பத்தியை பாதிக்காத விளைபொருட்களின் மூலமாக கிடைக்கும் வருவாயை பெருக்கிடும் நோக்கத்துடனும் சூரிய சக்தியால் இயங்கும் சூரிய ஒளி மின்வேலியினை ரூ.3 கோடி மானியத்துடன் தேசிய வேளாண் அபிவிருத்தித் திட்டம் மூலம் செயல்படுத்திட அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.
சூரிய ஒளி மின்வேலி அமைப்பதனால் விலங்குகள், வேட்டைக்காரர்கள் மற்றும் அன்னியர்களுக்கு மின் வேலியில் செலுத்தப்படும் உயர்மின் அழுத்தத்துடன் கூடிய குறுகிய உந்துவிசை மின் அதிர்ச்சியினால் அசவுகரியம் ஏற்பட்டு விளை பொருட்களின் உற்பத்தி பாதிக்கப்படாமலும் அதன் மூலம் கிடைக்கும் வருவாய் இழப்பில்லாமலும், விவசாயிகளுக்கு கிடைத்திட வகை செய்யும்.
விவசாயிகள் தங்கள் பகுதிக்கு ஏற்றவாறு மின்வேலியினை 5 வரிசை (ரூ.250/மீ) 7 வரிசை (ரூ. 350/மீ) அல்லது 10 வரிசை (ரூ.450/மீ) அமைப்பினை தெரிவு செய்து கொள்ளலாம். தனிநபர் விவசாயிக்கு அதிகபட்சமாக 5 ஏக்கர் அல்லது 1245 மீட்டர் மின்வேலி அமைக்க மானியம் வழங்கப்படும். மேலும், சூரிய ஒளி மின்வேலி அமைக்க செலவுத் தொகையில் 50 சதவீதம் அல்லது அதிகபட்சமாக ரூ.2.18 லட்சம் மானியம் வழங்கிட பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
தமிழக அரசு அனைத்து விவசாயிகளின் தேவைக்கு ஏற்ப நிதி ஒதுக்கீடு வழங்கிட நடவடிக்கை மேற்கொள்வதால், இத்திட்டத்தில் பயன்பெற விருப்பமுள்ள விவசாயிகள் விண்ணப்பத்துடன் சிட்டா, அடங்கல், வரைபடம், ஆதார் நகல், பாஸ்போர்ட் சைஸ் போட்டோ ஆகியவற்றுடன் கீழ்கண்ட அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம்.
இத்திட்டத்தில் பயன்பெற விருப்பமுள்ள அனைத்து வட்டார விவசாயிகள், செயற் பொறியாளர், (வேளாண் பொறியியல் துறை) குமாரசாமிப்பட்டி, சேலம்.7 (0427-2906266). உதவி செயற்பொறியாளர் (வேளாண் பொறியியல் துறை) குமாரசாமிப்பட்டி, சேலம். 7 0427-2906277). உதவி செயற் பொறியாளர் (வேளாண் பொறியியல் துறை) கோனூர் அஞ்சல், குஞ்சாண்டியூர், மேட்டூர் 04298-230361). உதவி செயற் பொறியாளர் (வேளாண் பொறியியல் துறை) 60அடி சாலை, காந்திநகர், ஆத்தூர் 04282-290585). உதவி செயற் பொறியாளர் (வேளாண் பொறியியல் துறை) ராமகிருஷ்ணா காம்ப்ளக்ஸ், சேலம் மெயின்ரோடு, சங்ககிரி 04283-290390 அலுவலகத்தில் தொடர்பு கொண்டு விண்ணப்பங்களை அளித்து பயன்பெறலாம் என்று தெரிவித்துள்ளார்.