தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்வதற்காக அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி பிப்.15-ம் தேதிக்குப் பிறகு மீண்டும் தமிழகம் வர உள்ளதாக தமிழக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் தெரிவித்தார்.
தஞ்சாவூரில் நேற்று செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: சசிகலா முழு குணமடைந்து வந்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. அவர் அதிமுகவுக்கு மீண்டும் வந்தாலும், வராவிட்டாலும் ஒன்றும் ஏற்படப் போவதில்லை. இத்தேர்தலில் அதிமுக கூட்டணி கண்டிப்பாக மிகப்பெரிய தோல்வியைச் சந்திக்கும்.
திமுக கூட்டணியில் காங்கிரஸுக்கு எத்தனை சீட் கேட்பது என்பதை அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி முடிவு செய்யும். ராகுல் காந்தி வருகைக்குப் பிறகு தமிழகத்தில் காங்கிரஸுக்கு மிகப்பெரிய எழுச்சி ஏற்பட்டிருப்பதைக் காண முடிகிறது.
அவர் தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்ள பிப்.15-ம் தேதிக்குப் பின் மீண்டும் தமிழகத்துக்கு வரவுள்ளார். எனவே காங்கிரஸுக்கு மக்களிடையே மிகப் பெரிய வரவேற்பு இருக்கிறது. அதற்கேற்றவாறு தொகுதிகள் எண்ணிக்கை அமையும். இவ்வாறு அவர் கூறினார்.