Regional01

பேருந்தில் ரூ.9 லட்சம் பணத்தை கொள்ளையடித்த 2 பேர் கைது

செய்திப்பிரிவு

ஓடும் பேருந்தில் ஓய்வு பெற்ற வங்கி மேலாளரிடம் ரூ.9 லட்சம் கொள்ளையடித்த வழக்கில் போலீஸார் இருவரை கைது செய்தனர். அவர்களிடமிருந்து ரூ.8 லட்சம் பறிமுதல் செய்தனர்.

சேலம் நரசோதிப்பட்டியைச் சேர்ந்த ஓய்வு பெற்ற வங்கி மேலாளர் வீரமணி (65). இவர் கடந்த 10-ம் தேதி தனது மனைவி ராஜேஸ்வரியுடன் ஈரோட்டில் உள்ள மகள் வீட்டுக்கு பேருந்தில் சென்றார். சங்ககிரி புதிய பேருந்து நிலையத்தில் பேருந்து நின்றபோது, ஏறிய மர்ம நபர்கள், வீரமணியிடம் பேச்சு கொடுத்துள்ளனர். கீழே ஐந்து ரூபாய் நோட்டு உள்ளதாகவும், அது உங்களுடையதா என்று பாருங்கள் எனக் கூறியுள்ளனர்.

தம்பதியர் இருவரும் ஐந்து ரூபாய் நோட்டை இருக்கைக்கு அடியில் தேடினர். பின்னர் சங்ககிரி பழைய பேருந்து நிறுத்தம் வந்ததும் மர்ம நபர்கள் கீழே இறங்கிச் சென்று விட்டனர். அதன்பின்னர், பேருந்து ஈரோடு பேருந்து நிலையம் சென்றதும், வீரமணி தான் வைத்திருந்த ரூ.9 லட்சம் பணம் இருந்த பையை தேடியபோது கிடைக்கவில்லை. மீண்டும் சங்ககிரி வந்த வீரமணியும், அவரது மனைவியும் ரூ.9 லட்சம் பணப்பையை மர்ம கும்பல், கொள்ளையடித்துச் சென்றதாக புகார் தெரிவித்தனர். சங்ககிரி போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

கடந்த சில நாட்களாக சங்ககிரி ரயில் நிலையத்தில் சந்தேகத்துக்கு இடமாக நின்றிருந்தவர்களை பிடித்து விசாரணை செய்தனர். சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூரைச் சேர்ந்த சீனிவாச பாண்டியன் (45), தாண்டவராயன்பட்டியைச் சேர்ந்த ரவிச்சந்திரன் (26) ஆகியோர், ஓய்வு பெற்ற வங்கி அதிகாரியிடம் இருந்து ரூ.9 லட்சத்தை கொள்ளையடித்தது தெரியவந்தது. இதையடுத்து இருவரையும் போலீஸார் கைது செய்து, அவர்களிடம் இருந்து ரூ.8 லட்சம் பணத்தை பறிமுதல் செய்தனர். இவர்களின் கூட்டாளிகள் தமிழ்வாணன், பாலமுருகன் இருவரையும் போலீஸார் தேடி வருகின்றனர்.

SCROLL FOR NEXT