72-வது குடியரசு தினத்தையொட்டி ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் தேசிய கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்திய மாவட்ட ஆட்சியர்கள் 219 பயனாளி களுக்கு ரூ. 3 கோடியே 75 லட்சம்மதிப்பில் நலத்திட்ட உதவி களை வழங்கினர்.
72-வது குடியரசு தினவிழா நாடு முழுவதும் நேற்று கொண்டாடப்பட்டது. இதை யொட்டி, வேலூர் கோட்டை வளாகத்தில் உள்ள மகாத்மா காந்தி சிலைக்கு மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பிறகு, கோட்டை கொத்தளத்தில் தேசிய கொடியை ஆட்சியர் ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.
இதைத்தொடர்ந்து, வேலூர் நேதாஜி விளையாட்டு மைதானத் தில் தேசிய கொடியை ஏற்றி வைத்து காவலர்களின் அணி வகுப்பு மரியாதையை மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம் ஏற்றுக் கொண்டார். இதையடுத்து, சமாதான புறாக்களை ஆட்சியர் பறக்கவிட்டார். தொடர்ந்து, காவல் துறையில் சிறப்பாக பணியாற்றிய 50 காவலர்களுக்கு காவலர் நற்பணி பதக்கம் மற்றும் நற்சான்றிதழ்களை மாவட்ட ஆட்சியர் வழங்கினார். மேலும், அரசின் பல்வேறு துறைகளில் சிறப்பாக பணியாற்றிய 227 அரசு அலுவலர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்களை ஆட்சியர் சண்முக சுந்தரம் வழங்கி கவுரவித்தார்.
இதையடுத்து, தேசிய நீர்மேலாண்மை பணிகளை சிறப்பாக செய்து தென்னிந்திய அளவில் வேலூர் மாவட்டம் முதல் பரிசு பெற்றதற்காக மத்திய அமைச்சர் வழங்கிய வாழ்த்து மடலை, மாவட்ட வருவாய் அலுவலர் மற்றும் மாவட்ட திட்ட அலுவலரிடம் ஆட்சியர் சண்முக சுந்தரம் வழங்கினார். பிறகு, பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை, வேளாண் மற்றும் தோட்டக் கலை, முன்னாள் படைவீரர் நலத்துறை, மாற்றுத் திறனாளிகள் நலத்துறை, மாவட்ட தொழில் மையம், தமிழ்நாடு ஊரக வாழ்வாதாரம் உள்ளிட்ட பல்வேறு துறைகள் சார்பில் 67 பயனாளிகளுக்கு ரூ.2 கோடியே 50 லட்சத்து 58 ஆயிரத்து 567 மதிப்பில் நலத்திட்ட உதவிகளை ஆட்சியர் வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில், வேலூர் சரக டிஐஜி காமினி, மாவட்ட வருவாய் அலுவலர் பார்த்தீபன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வகுமார், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) விஜயராகவன், திட்ட இயக்குநர் மாலதி, வருவாய் கோட்டாட் சியர்கள் கணேஷ் (வேலூர்), ஷேக்மன்சூர் (குடியாத்தம்) உட்பட பலர் கலந்து கொண்டனர்.
ராணிப்பேட்டை
அதேபோல, கரோனா நோய் தடுப்புப்பணிகளில் சிறப்பாக பணியாற்றிய மருத்துவர்கள், செவிலியர்கள், காவல் மற்றும் வருவாய்த் துறையினர், தூய்மைப் பணியாளர்கள் உள்ளிட்ட 71 பேருக்கு பாராட்டு நற்சான்றிதழை ஆட்சியர் கிளாட்ஸ்டன் புஷ்பராஜ் வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில், அரசின் பல்வேறு துறைகள் சார்பில் ரூ.31 பயனாளிகளுக்கு 39 லட்சத்து 70 ஆயிரத்து 50 மதிப்பில் நலத்திட்ட உதவிகளை ஆட்சியர் வழங்கினார். நிகழ்ச்சியில், திட்ட இயக்குநர் உமா, மாவட்ட வருவாய் அலுவலர் ஜெயச்சந்திரன், சார் ஆட்சியர் இளம்பகவத், ஆர்டிஓ பேபிஇந்திரா, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) வள்ளி, மாவட்ட வழங்கல் அலுவலர் மணிமேகலை உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
திருப்பத்தூர்
‘நீட்' தேர்வில் தேர்ச்சிபெற்ற அரசுப்பள்ளி மாணவர்கள், கரோனா நோய் தடுப்புப்பணிகளில் சிறப்பாக பணியாற்றிய சுகாதாரத் துறையினர், தூய்மைப்பணி யாளர்கள், வருவாய்த் துறையினர் உள்ளிட்ட 76 பேருக்கு நற்சான்றி தழ்களை ஆட்சியர் சிவன் அருள் வழங்கினார்.
அரசின் பல்வேறு துறைகள் சார்பில் 121 பயனாளிகளுக்கு ரூ.83 லட்சத்து 52 ஆயிரத்து 390 மதிப் பிலான நலத்திட்ட உதவிகளை ஆட்சியர் சிவன் அருள் வழங்கினார். நிகழ்ச்சியில், பறை இசை கிராமிய கலைக்குழு மற்றும் கிராமிய இசை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இந்நிகழ்ச்சியில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர். விஜயகுமார், மாவட்ட வருவாய் அலுவலர் தங்கைய்யா பாண்டியன், சார் ஆட்சியர் வந்தனாகர்க், ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) வில்சன்ராஜசேகர், திட்ட இயக்குநர் மகேஷ்பாபு, மகளிர் திட்ட இயக்குநர் உமாமகேஸ்வரி, துணை ஆட்சியர்கள் அப்துல்முனீர், பூங்கொடி, வேளாண் இணை இயக்குநர் ராஜசேகர், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மார்ஸ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.