அரசு தொடக்கப் பள்ளியில் மாண விகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியருக்கு 49 ஆண்டுகளும், அவர் மீது நடவடிக்கை எடுக்கத் தவறிய தலைமை ஆசிரியருக்கு ஓராண்டும் சிறை தண்டனை விதித்து புதுக்கோட்டை மகளிர் நீதிமன்றம் நேற்று தீர்ப்பளித்தது.
புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வக்கோட்டை வட்டம் துவார் கிராமத்தைச் சேர்ந்தவர் அன்பரசன்(52). இவர், நரியன்புதுப்பட்டி அரசு தொடக்கப் பள்ளி ஆசிரியராக பணிபுரிந்து வந்தார். கடந்த 2018-ல் அங்கு படித்த 6 மாணவிகளுக்கு ஆசிரியர் அன்பரசன் பாலியல் தொல்லை கொடுத்து வந்ததாகவும், இவர் மீது அப்பள்ளித் தலைமை ஆசிரியர் ஞானசேகரன் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் புதுக்கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.
இதுகுறித்து போலீஸார் வழக்கு பதிவு செய்து அன்பரசன், ஞானசேகரன் ஆகியோரை போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணை, புதுக்கோட்டை மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.
வழக்கை விசாரித்த நீதிபதி ஆர்.சத்யா, பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியர் அன்பரசனுக்கு 3 பிரிவுகளில் மொத்தம் 49ஆண் டுகள் சிறை தண்டனையும், ரூ.45,000 அபராதமும், அவர் மீது நடவடிக்கை எடுக்கத் தவறிய தலைமை ஆசிரியர் ஞானசேகரனுக்கு 1 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.5,000 அபராதமும் விதித்து நேற்று தீர்ப்பளித்தார்.
மேலும், பாதிக்கப்பட்ட 6 சிறுமிகளுக்கும் தலா ரூ.1.50 லட்சம் வீதம் தமிழக அரசு இழப்பீடு வழங்க வேண்டும் எனவும் அவர் உத்தரவிட்டார். இவ்வழக்கில் அரசுத் தரப்பில் வழக்கறிஞர் அங்கவி ஆஜரானார்.
இவ்வழக்கில் பணியாற்றிய புதுக்கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் செல்வி, நீதிமன்ற பணிக் காவலர் அனுராதா ஆகியோரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எல்.பாலாஜி சரவணன் பாராட்டினார்.