திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் மூச்சுத் திணறல் காரணமாக வேலூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் நேற்று அனுமதிக்கப்பட்டார். சிகிச்சைக்கு பிறகு அவர் வீடு திரும்பினார்.
பொங்கல் பண்டிகையை யொட்டி காட்பாடி காந்திநகரில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் திமுக சார்பில் நடைபெற்ற பொங்கல் விழாவில் திமுக பொதுச் செயலாளர் துரை முருகன் கலந்து கொண்டு, கட்சி நிர்வாகிகளை சந்தித்து பொங்கல் வாழ்த்துக்களை தெரிவித்தார். காலை 8 மணி முதல் பிற்பகல் 2.30 மணி வரை அவர் கட்சி நிர்வாகிகளை சந்தித்து பொங்கல் வாழ்த்துக்களை தெரிவித்தார். இந்நிகழ்ச்சியால் அவர் சோர் வடைந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில், காட்பாடி காந்திநகரில் உள்ள வீட்டில் இருந்த துரை முருகனுக்கு நேற்று காலை திடீ ரென மூச்சுத் திணறல் ஏற்பட்டது. உடனடியாக அவர் வேலூர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மூச்சுத் திணறல் ஏற்பட்டதால் இருதய சிகிச்சை பிரிவில் அவர் அனுமதிக்கப்பட்டார். இருதய சிகிச்சை நிபுணர்கள் மற்றும் மருத்துவர்கள் அவரை பரிசோதனை செய்து சிகிச்சை அளித்தனர். சிகிச்சைக்கு பிறகு அவர் குணமடைந்து நேற்று பிற்பகல் வீடு திரும்பினார்.
இது குறித்து மருத்துவர்கள் கூறும்போது, ‘‘திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் மூச்சுத் திணறல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டார். அவருக்கு வாயு கோளாறு உள்ளது.
சிகிச்சைக்கு பிறகு, அவரது உடல் நிலை சீரானாது. இயல்பு நிலைக்கு துரைமுருகன் திரும்பியதால் அவர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்’’ என்றனர்.
இது குறித்து கட்சி நிர்வாகிகள் கூறுகையில், ‘பொதுச்செயலாளருக்கு எந்த பிரச்சினையும் இல்லை, வாயுக்கோளாறு காரணமாக அவர் மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை எடுத்தார். பிறகு உடல் நிலை சீரானதை தொடர்ந்து அவர் வீடு திரும்பினார்.
சிறிது நேரம் ஓய்வுக்குப்பிறகு அவர் வழக்கமான பணிகளில் ஈடுபட்டு வருகிறார்’’ என்றனர்.