திருச்சியில் நேற்று நடைபெற்ற சமுதாய நூலகம் திறப்பு விழாவில் மாணவர் ஒருவருக்கு புத்தகத்தை பரிசாக வழங்குகிறார் மாவட்ட ஆட்சியர் சு. சிவராசு. உடன் மாவட்ட நூலக அலுவலர் அ.பொ. சிவக்குமார் உள்ளிட்டோர். 
Regional01

தமிழகத்தில் முதன்முறையாக திருச்சியில் சமுதாய நூலகம் திறப்பு

செய்திப்பிரிவு

தமிழக அரசின் பொது நூலகத் துறை சார்பில் மாநிலத்தில் முதன்முறையாக திருச்சியில் சமுதாய நூலகத் திறப்பு விழா நேற்று நடைபெற்றது.

திருச்சி மாவட்ட நூலக ஆணைக்குழு சார்பில் தென்னூர் பட்டாபிராமன் சாலையில்உள்ள ரோகிணி கார்டன் என்கிளேவ் சி பிளாக் அடுக்குமாடி குடியிருப்பு வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள இந்நூலகத்தை மாவட்ட ஆட்சியர் சு.சிவராசு திறந்து வைத்தார்.

அப்போது அவர் பேசியதாவது: தமிழக அரசு பொது நூலகத் துறை, சமுதாய நூலகம்என்ற புதிய திட்டத்தை அண்மையில் அறிமுகப்படுத்தியது.இத்திட்டத்தின் கீழ், பொதுமக்களிடையே வாசிப்பு பழக்கத்தைஅதிகரிக்கவும், மேம்படுத்தவும்அடுக்குமாடி குடியிருப்புகளில்நூலகங்கள் திறக்கப்படவுள்ளன.

அந்த வகையில் தமிழகத்தில் முதன்முதலாக திருச்சியில் இந்த நூலகம் தற்போது திறக்கப்பட்டுள்ளது. சமுதாய நூலகம் அமைக்க குடியிருப்போர் ரூ.20 ஆயிரம் வைப்புத் தொகையாக மாவட்ட நூலக ஆணைக்குழுவுக்கு செலுத்த வேண்டும். நூலகம் செயல்பட அறை மற்றும் தளவாடங்கள் வழங்க வேண்டும்.நூலகத்தை குடியிருப்போர் தனது சொந்தப் பொறுப்பிலேயே நடத்த வேண்டும். இந்தநிபந்தனைகளுக்கு உட்பட்டு சமுதாய நூலகம் அமைக்க முன்வந்த குடியிருப்புவாசிகளை பாராட்டுகிறேன்.

இவ்வாறு அவர் பேசினார்.

பின்னர், அடுக்குமாடி குடியிருப்பு வளாகத்தில் உள்ளவர்களுக்கு நூலக உறுப்பினர் அட்டைகளை ஆட்சியர் வழங்கினார். விழாவில், மாவட்ட நூலகஅலுவலர் அ.பொ. சிவக்குமார், மைய நூலக வாசகர் வட்டத்தலைவர் கவிஞர் வீ.கோவிந்தசாமி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

SCROLL FOR NEXT