திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் விஷ்ணு வெளியிட்ட செய்திக் குறிப்பு:
வாய்பேச இயலாத, செவித்திறன் பாதிக்கப்பட்ட மற்றும் பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளுக்காக பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட செயலிகளுடன் கூடிய செல்போன் 2020 – 2021- ம் நிதியாண்டு முதல் வழங்கப்பட உள்ளது. இந்த செல்போனை பெற விரும்புவோர் மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை பெற்றவராகவும், 18 வயது நிரம்பிய கல்லூரியில் இளங்கலை பயிலும் மாணவ- மாணவியாகவோ, வேலைவாய்ப்பற்ற பட்டதாரியாகவோ, சுயதொழில் மற்றும் தனியர் துறையில் பணிபுரிபவராகவோ இருத்தல் வேண்டும். இந்த தகுதிகள் பெற்ற மாற்றுத்திறனாளிகள் தங்களது தேசிய அடையாள அட்டை (அனைத்து பக்கங்கள்), உணவுப் பொருள் வழங்கல் அட்டை, ஆதார் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை ஆகியவற்றின் நகல்கள், கல்லூரியில் படிப்பவராயின் கல்லூரியில் படிப்பதற்கான சான்றிதழ், சுயதொழில் செய்பவராயின் சுயதொழில் புரிவதற்கான சான்று, வேலைவாய்ப்பற்ற பட்டதாரிகள் பட்டயச் சான்றிதழ் நகல் மற்றும் பாஸ்போர்ட் அளவு புகைப்படம் 2 ஆகியவற்றுடன் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம், (மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம்) திருநெல்வேலி - 627 009 என்ற முகவரியில் வரும் 19-ம் தேதிக்குள் நேரிலோ அல்லது தபாலிலோ விண்ணப்பித்து பயனடையலாம்.
மத்திய மற்றும் மாநில அரசுதுறையில் பணிபுரியும் மாற்றுத்திறனாளி ஊழியர்களுக்கு இத்திட்டம் பொருந்தாது. கடந்த செப்டம்பர் மாதம் மத்திய அரசு மூலம் செல்போன் பெற்றவர்கள் விண்ணப்பிக் வேண்டாம்.
மேலும் விவரங்களுக்கு அலுவலக தொலைபேசி எண்: 0462-2500157-ல் தொடர்பு கொள்ளலாம் என்று தெரிவித்துள்ளார்.