Regional02

மத்திய கல்வி நிறுவனங்களில் பயிலும் மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை

செய்திப்பிரிவு

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி வெளியிட்டுள்ள அறிக்கை:

தமிழ்நாடு மற்றும் பிற மாநிலங்களில் உள்ள பட்டியலிடப்பட்ட மத்திய அரசு கல்வி நிறுவனங்களான ஐஐடி, ஐஐஐடி, என்ஐடி, ஐஐஎம் மற்றும் மத்திய பல்கலைக் கழகங்களில் பட்டப் படிப்பு, பட்ட மேற்படிப்பு பயிலும் தமிழ்நாட்டைச் சேர்ந்த பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினருக்கு கல்வி உதவித் தொகை வழங்கப்பட உள்ளது.

இந்த உதவித் தொகை பெற விண்ணப்பிக்கும் மாணவ, மாணவிகள் தமிழ்நாட்டைச் சேர்ந்த பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் மாணவ, மாணவிகளாக இருக்க வேண்டும், குடும்ப ஆண்டு வருமானம் ரூ.2 லட்சத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும். ஒரு மாணவ, மாணவியருக்கு கல்வி உதவித் தொகையாக ஆண்டுக்கு ரூ.2 லட்சம் வரை முதல்கட்டமாக 100 மாணவ, மாணவிகளுக்கு வழங்கப்படும்.

மாணவ, மாணவிகள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலரை அணுகி விண்ணப்பங்களை பெற்றுக் கொள்ளலாம்.

விண்ணப்பங்களை தாங்கள் பயிலும் கல்வி நிறுவனங்களில் சமர்ப்பிக்க வேண்டும். கல்வி நிறுவனங்கள் பிப்ரவரி 15-ம் தேதிக்குள் சென்னை, எழிலகத்தில் உள்ள பிற்படுத்தப்பட்டோர் நல இயக்ககத்துக்கு அனுப்பி வைக்க வேண்டும். விண்ணப்பங்களை tngovtiitscholarship@gmail.com என்ற இ-மெயில் முகவரியிலும் அனுப்பி வைக்கலாம் என்று தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT