Regional02

ஐஐடி, ஐஐஎம், என்ஐடியில் படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை

செய்திப்பிரிவு

தமிழ்நாடு மற்றும் பிற மாநிலங்களில் உள்ள பட்டியலிடப்பட்ட மத்திய அரசு கல்வி நிறுவனங்களான ஐஐடி, ஐஐஎம், என்ஐடி மற்றும் மத்திய பல்கலைக்கழகங்களில் பட்டப்படிப்பு மற்றும் பட்ட மேற்படிப்பு பயிலும் தமிழகத்தை சேர்ந்த மாணவ, மாணவியருக்கு கல்வி உதவித்தொகையாக மாணவர்ஒருவருக்கு ஆண்டுக்கு ரூ.2 லட்சம் வரை முதற்கட்டமாக 100 மாணவ, மாணவிகளுக்கு 2019-20-ம் கல்வி ஆண்டு முதல் கல்வி உதவித்தொகை வழங்குவதற்கு தமிழக அரசு ஆணை யிட்டுள்ளது.

கல்வி உதவித்தொகை பெற, தமிழகத்தைச் சோர்ந்த பிற்படுத்தப்பட்டோர், மிகப் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் மாணவ, மாணவிகளாக இருத்தல் வேண்டும். பட்டியலிடப்பட்ட மத்திய அரசு கல்வி நிறுவனங்களான ஐஐடி, ஐஐஎம், ஐஐஐடி, என்ஐடி மற்றும் மத்திய பல்கலைக்கழகங்களில் பட்டப் படிப்பு மற்றும் பட்ட மேற்படிப்பு பயில வேண்டும். குடும்ப ஆண்டு வருமானம் ரூ.2 லட்சத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும்.கல்வி உதவித்தொகைக்கு புதியதாக விண்ணப்பிக்க கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலுள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலரை அணுகி விண்ணப்பங்களைப் பெற்றுக் கொள்ளலாம்.

கல்வி உதவித்தொகை விண்ணப் பத்தை மாணவர்கள் பூர்த்தி செய்து, தொடர்புடைய கல்வி நிறுவனத்தில் சமர்ப்பிக்க வேண்டும். கல்வி நிறுவனங்கள் தங்களது சான்றொப்பத்துடன் தகுதியான விண்ணப்பத்தினை பரிந்துரை செய்து, இயக்குநர், பிற்படுத்தப்பட்டோர் நல இயக்ககம், எழிலகம் இணைப்பு கட்டிடம், 2-ம் தளம், சேப்பாக்கம், சென்னை-5 என்கிற முகவரிக்கு பூர்த்தி செய்த விண்ணப்பங்களை வரும் 15-ம் தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும் என கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் ஜெயசந்திர பானு ரெட்டி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT