சேலம் மாநகராட்சிப் பகுதியில் அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை செய்வது கண்டறியப்பட்டு, 38 கடைகளில் இருந்து 550 கிலோ எடைகொண்ட பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்து, ரூ.63,000 அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக மாநகராட்சி ஆணையர் ரவிச்சந்திரன் கூறியது:
சுற்றுப்புறச்சூழலை பேணிப் பாதுகாக்கும் வகையில் ஒருமுறை மட்டும் பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனைக்கும், பயன்பாட்டுக்கும் அரசுதடைவிதித்துள்ளது. அதனடிப்படையில், சேலம் மாநகராட்சியில் சுகாதார அலுவலர்கள் தலைமையில் 5 கண்காணிப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டு தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை மற்றும் பயன்பாடு கண்காணிக்கப்பட்டு வருகிறது.
சேலம், செவ்வாய்ப்பேட்டை பகுதியில் சுகாதார அலுவலர்கள், சுகாதார ஆய்வாளர்கள் மற்றும் பணியாளர்களைக் கொண்ட 3 கண்காணிப்புக் குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர். செவ்வாய்ப்பேட்டை பகுதியில் 38 கடைகளில் ஆய்வு செய்ததில், விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த 550 கிலோ எடையுள்ள தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்து, கடை உரிமையாளர்களிடமிருந்து ரூ.63,000 அபராதம் வசூலிக்கப்பட்டது.
தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை மற்றும் பயன்பாட்டினை முற்றிலும் தடுக்கும் வகையில் தினமும் அலுவலர்கள் ஆய்வு மேற்கொண்டு கண்காணித்து வருகின்றனர். எனவே, பொதுமக்கள் அரசால் தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாட்டை முழுமையாக தவிர்க்க வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.
இவ்வாறு அவர் கூறினார்.சேலம் செவ்வாய்ப்பேட்டை பகுதியில் உள்ள கடைகளில் ஆய்வு மேற்கொண்டு தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பறிமுதல் செய்த மாநகராட்சி சுகாதார அலுவலர்கள் தலைமையிலான கண்காணிப்புக் குழுவினர்.