மதுரை போதைப் பொருள் தடுப்பு வழக்குகளை விசாரிக்கும் நீதிமன்றத்தின் தற்போதைய அரசு வழக்கறிஞர் செயல்பட உயர் நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்தது.
மதுரை விளாங்குடியைச் சேர்ந்த பாண்டியராஜன், உயர் நீதிமன்றக் கிளையில் தாக்கல் செய்த மனு:
மதுரை போதைப் பொருள் தடுப்பு வழக்குகளை விசாரிக் கும் நீதிமன்றத்தில் அரசு சிறப்பு வழக்கறிஞராக பி.சீதாராமன் பணிபுரிகிறார்.
போதைப் பொருள் தடுப்புச் சட்டத்தில் 180 நாட்களுக்குள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய வேண்டும். குறிப்பிட்ட நாட்களுக்குள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யாவிட்டால் குற்ற வாளிகளுக்கு ஜாமீன் வழங் கப்படும்.
அரசு சிறப்பு வழக்கறிஞர் சீதாராமன், குற்றவாளிகளிடம் லஞ்சம் பெற்றுக் கொண்டு குற்றப் பத்திரிகை தாக்கல் செய்வதை தாமதப்படுத்தி வருகிறார். இது தொடர்பாக ஒரு வழக்கில் சீதாராமனை உயர் நீதிமன்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் எச்ச ரித்துள்ளார். இருப்பினும் போதை வழக்குகளில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்வதில் வேண்டும் என்றே தாமதம் செய்யப்படுகிறது.
எனவே மதுரை போதை தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் அரசு சிறப்பு வழக்கறிஞராக சீதாராமன் செயல்பட இடைக்காலத் தடை விதித்து, அவரை அரசு சிறப்பு வழக்கறிஞர் பொறுப்பில் இருந்து நீக்கி, தகுதியானவரை அரசு சிறப்பு வழக்கறிஞராக நியமிக்க உத்தரவிட வேண்டும் எனக் கூறப்பட்டிருந்தது.
இந்த மனுவை நீதிபதிகள் என்.கிருபாகரன், பி.புகழேந்தி ஆகி யோர் விசாரித்தனர். மனுதாரர் சார்பில் வழக்கறிஞர் ஏ.கண்ணன் வாதிட்டார்.
பின்னர், மதுரை மாவட்ட போதைப் பொருள் தடுப்பு நீதிமன்ற அரசு சிறப்பு வழக்கறிஞராக சீதாராமன் செயல்பட இடைக்காலத் தடை விதிக்கப்படுகிறது. இந்த வழக்கில் லஞ்ச ஒழிப்புத் துறையை நீதிமன்றம் தாமாக முன் வந்து எதிர் மனுதாரராகச் சேர்க்கிறது. வழக்கறிஞர் சீதாராமன் மற்றும் அவரது குடும்பச் சொத்துகள் தொடர்பாக லஞ்ச ஒழிப்புத் துறையினர் விசாரித்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டு, விசாரணையை புதன்கிழமைக்கு (இன்று) நீதி பதிகள் ஒத்திவைத்தனர்.