ரூ.7.85 கோடியில் பழமை மாறாமல் புதுப்பிக்கப்பட்ட மதுரை திருமலை நாயக்கர் அரண்மனை நேற்று முதல் சுற்றுலாப் பயணிகளின் பார்வைக்காகத் திறக்கப்பட்டது.
மதுரை நகரில் சுற்றிப் பார்க்க வருவோர் அதிகம் செல்லும் இடம் திரு மலை நாயக்கர் அரண்மனை. பள்ளி, கல்லூரி மாணவர்கள், உள்நாடு மற்றும் வெளிநாட்டுப் பயணிகள் அதிகளவு இங்கு சுற்றுலா வந்து செல்கின்றனர். பிரமிக்கத்தக்க பிரம்மாண்ட தூண்கள், பார்ப்போரைக் கவரும் கட்டிடக் கலை, ரம்மியமான கலை வேலைப்பாடுகள் மிக்க மேற்கூரையைக் கொண்டுள்ள திருமலை நாயக்கர் அரண்மனை (மகால்), உலக சுற்றுலாத் தலங்களில் முக்கியமானதாகும்.
தமிழகத்தில் எஞ்சியுள்ள பண்டைய நினைவுச் சின்னங்களில் ஒன்றான இந்த அரண்மனை தொல்லியல் துறையால் பராமரிக்கப்படுகிறது. ஆங்கிலேயர் ஆட்சியில் கடைசியாக 1860-ல் இந்த அரண்மனை புதுப்பிக்கப்பட்டது. போதிய பணியாளர்கள் இல்லாததால் அரண்மனை உள்ளேயும், வெளியேயும் சிதிலமடைந்து காணப்பட்டது.
அரண்மனைக்கு வரும் காதலர்கள் தூண்களில் தங்களது பெயர்களை எழுதி அதன் அழகைக் கெடுத்து வைத்திருந்தனர். புறாக்கள் நிரந்தரமாக அரண்மனையின் மேற்கூரையில் தங்கியிருந்ததால் அதன் எச்சங்கள் சுகாதாரக் கேட்டை ஏற்படுத்தின. மேற்கூரை உடைந்து காணப்பட்டதால் மழைக் காலத்தில் ஒழுக ஆரம்பித்தது.
கடந்த ஆண்டு சுற்றுலாத் துறை சார்பில் ஆசிய வளர்ச்சி வங்கி மூலம் திருமலை நாயக்கர் அரண்மனை கரோனா தாக்கம் தொடங்கிய சில மாதங்கள் முன்பிருந்து ரூ.3.60 கோடியில் அதன் பழமை மாறாமல் பாரம்பரிய முறைப்படி புதுப்பிக்கப்பட்டது. அரண்மனையின் வெளியே பார்வை யாளர்களைக் கவரும்வகையில் ‘ஸ்மார்ட் சிட்டி’ திட்டத்தில் ரூ.3.25 கோடியில் புல்வெளிப் பூங்கா, அலங்காரச் செடிகள், பாதங்களைப் பாதிக்காத கற்கள் பதிக் கப்பட்ட நடைபாதைகள், புல்வெளித் தரை யின் நடுவில் செயற்கை நீரூற்று என திருமலை நாயக்கர் அரண்மனை தற்போது வண்ண மயமாகியுள்ளது.
வெயில், மழைக் காலத்தில் சுற்றுலாப் பயணிகள் அதன் தாக்கத்தில் இருந்து தப்பிக்க வளாகத்தில் பிரம்மாண்ட பந் தல்கள் அமைக்கப்பட்டுள்ளன. அதில் சுற்றுலாப் பயணிகள் அமருவதற்காக இருக்கைகள் போடப்பட்டுள்ளன. அரண் மனையைப் பார்வையிட வரும் சுற்றுலாப் பயணிகள் மற்றும் மாற்றுத் திறனாளிகள் பயன்படுத்துவதற்காக தனித்தனியாக இ-கழிவறைகள் தயாராக உள்ளன.
அரண்மனையின் பராமரிப்புப் பணிகள் நிறைவடைந்தும் கடந்த 3 மாதங்களாகத் திறக்கப்படாமல் இருந்தது. மதுரை வரும் சுற்றுலாப் பயணிகள் திருமலை நாயக்கர் அரண்மனையைப் பார்க்க முடியாமல் ஏமாற்றமடைந்தனர். இந்நிலையில், நேற்று முதல் திருமலை நாயக்கர் அரண்மனை சுற்றுலாப் பயணிகளின் பார்வைக்காகத் திறக்கப்பட்டுள்ளது. முதல் நாள் என்பதால் அரண்மனை திறக்கப்பட்ட தகவலை அறி யாததால் பார்வையாளர்கள் வருகை நேற்று குறைவாகவே காணப்பட்டது.