மதுரை மாவட்டம், கொட்டாம்பட்டி ஒன்றியத்தில் விளைநிலங்களில் ஐ.ஓ.சி. எரிவாயு குழாய் பதிக்கப்பட்ட இடங்களில் சு. வெங்கடேசன் எம்.பி. ஆய்வு செய்தார். அவரிடம் விவசாயிகள் கோரிக்கை மனுவை அளித்தனர்.
அம்மனுக்களில் குறிப் பிட்டுள்ள விவரம்: ஐஒசி எரிவாயு திட்டத்தால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு முறையான இழப்பீடு வழங்க அரசிடம் வலியுறுத்த வேண்டும். நிலம் கொடுக்க மறுக்கும் விவசாயிகளை கட்டாயப்படுத்த மாட்டோம் என உறுதி அளிக்க வேண்டும். இத்திட்டம் தொடர்பான எந்த இறுதி முடிவும் கிராமசபைகள் மூலமே எடுக்கப்பட வேண்டும். இத்திட்டத்தில் சில அரசியல் கட்சியினர் மற்றும் இடைத்தரகர்களை வைத்து விவசாயிகளை சம்மதிக்க அரசு எடுக்கும் நடவடிக்கைகளை எம்.பி. கண்டிக்க வேண்டும். பெரியாறு ஆற்றோடு காவிரி நதியை இணைத்து கொட்டாம்பட்டி, நத்தம், சிங்கம்புணரி உள்ளிட்ட பகுதிகளில் பாசன வசதி செய்து தர முயற்சி எடுக்க வேண்டும் எனக் குறிப்பிட்டிருந்தனர்.
விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவர் எஸ்.பி. இளங்கோவன், மார்க்சிஸ்ட் கட்சியின் மேலூர் தாலுகா செயலாளர் எம்.கண்ணன் , மாவட்டக்குழு உறுப்பினர் அடக்கிவீரணன் மற்றும் தாலுகாக் குழு உறுப்பினர் ஜெயராமன், மணவாளன் ஆகியோர் உடன் இருந்தனர்.