Regional01

அரசு வேலை வாங்கித் தருவதாக இளைஞரிடம் ரூ.22 லட்சம் முறைகேடு மதுரை அரசு அலுவலர் உட்பட 2 பேர் மீது வழக்கு

செய்திப்பிரிவு

அரசு வேலை வாங்கித் தருவதாக கன்னியா குமரி அருகே கயிதாகுழியைச் சேர்ந்த இளைஞரிடம் ரூ.22 லட்சம் முறைகேடு செய்ததாக, மதுரை அரசு அலுவலர் உட்பட 2 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப் பட்டுள்ளது.

காரைக்குடியில் சுப்பிரமணியபுரத்தைச் சேர்ந்தவர் கீதா. மதுரை கோ- ஆப் டெக்ஸில் கண்காணிப்பாளராக உள்ளார். இவரை கயிதாகுழியைச் சேர்ந்த மகேஷ் (35) என்பவர் அரசு வேலை தொடர்பாக 2019-ல் அணுகினார்.

இந்நிலையில் வேலை தொடர்பாக சங்கரன்கோவில் அரசு மருத்துவமனையில் தொழில்நுட்ப பிரிவில் வேலை பார்க்கும் பழனிச்சாமியிடம் மகேஷை கீதா அறிமுகம் செய்தார். அப்போது மகேசுக்கு அரசு வேலை வாங்கித் தருவதாக உறுதி அளித்த பழனிச்சாமி, அதற்காக ரூ.22 லட்சம் கேட்டுள்ளார்.

இதற்கு சம்மதித்த மகேஷ், மதுரை ரிங்ரோடு பகுதி தனியார் மருத்துவக் கல்லூரி வளாகத்தில் 2019 நவம்பர் 11-ம் தேதி ரூ.22 லட்சத்தை பழனிச்சாமியிடம் கொடுத்துள்ளார்.

ஆனால், அதன்பிறகு பேசியபடி வேலை வாங்கித் தரவில்லை. பணத்தைத் திருப்பிக் கேட்டபோது பழனிச்சாமி கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.

இதுகுறித்து அவனியாபுரம் போலீஸில் மகேஷ் புகார் அளித்தார். அதன்பேரில் காரைக்குடியைச் சேர்ந்த கீதா மற்றும் பழனிச்சாமி ஆகிய இருவர் மீதும் மோசடி வழக்குப்பதிவு செய்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

SCROLL FOR NEXT