நீலகிரி மாவட்டம் உதகை தொட்டபெட்டா சிகரத்தில் சாரல் மழை மற்றும் பனி மூட்டத்தை ரசித்த சுற்றுலாப் பயணிகள். 
Regional02

8 மாதங்களுக்குப் பிறகு சுற்றுலாத் தலங்கள் திறப்பு ரம்மியமான சூழலால் உதகையில் மக்கள் உற்சாகம்

செய்திப்பிரிவு

நீலகிரி மாவட்டத்தில் கரோனா பரவல் காரணமாக மூடப்பட்டிருந்த அனைத்து சுற்றுலாத் தலங்களும் மீண்டும் திறக்கப்பட்டன.

கரோனா ஊரடங்கு காரணமாக நீலகிரி மாவட்டத்தில் உள்ள அனைத்து சுற்றுலாத் தலங்களும் கடந்த மார்ச் 17-ம் தேதி மூடப் பட்டன.

ஊரடங்கு தளர்வால் கடந்த செப்டம்பர் மாதம் முதல்கட்டமாக தோட்டக்கலைத் துறையின் கீழ் உள்ள உதகை தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா, குன்னூர் சிம்ஸ் பூங்கா, காட்டேரி பூங்கா ஆகியவை திறக்கப்பட்டன. பிற சுற்றுலாத் தலங்களான தொட்ட பெட்டா, முதுமலை, படகு இல்லம் ஆகியவை திறக்கப்படவில்லை.

தற்போது அரசு அனுமதியுடன், தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள படகு இல்லம், தொட்டபெட்டா, பைக்காரா படகு இல்லங்கள் நேற்று திறக்கப்பட்டன. நீலகிரி மாவட்டத்தில் சாரல் மழையும், பனி மூட்டமான காலநிலையும் நிலவுவதால், ரம்மியமான சூழலில் சுற்றுலாத் தலங்களை மக்கள் ரசித்துச் சென்றனர். உதகை தொட்டபெட்டா சிகரம் பகுதியில் வெப்பநிலை நேற்று அதிகபட்சமாக 15 டிகிரி செல்சியஸூம், குறைந்தபட்சமாக இரவில் 11 டிகிரி செல்சியஸூம் நிலவியது. காற்றில் ஈரப்பதம் 88 சதவீதமாக இருந்தது.

SCROLL FOR NEXT