தமிழகம் அனைத்துத் துறை களிலும் சிறந்து விளங்குகிறது என்று வருவாய்த் துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் தெரிவித்தார்.
அம்மா சாரிட்டபிள் டிரஸ்ட் சார்பில் ஆசிரியர்களுக்கு கரோனா விழிப்புணர்வு முகாம் திருமங்கலத்தில் நடந்தது. அம்மா சாரிட்டபிள் டிரஸ்ட் செயலர் யு.பிரியதர்ஷினி தலைமை வகித்தார். பொருளாளர் பி.மீனாள் முன்னிலை வகித்தார்.
இதில் அமைச்சர் ஆர்.பி.உதய குமார் பேசியதாவது:
திருமங்கலம் தொகுதியில் 324 கிராமங்கள் உள்ளன. அம்மா சாரிட்டபிள் டிரஸ்ட் மூலம் மாணவர்களுக்கு 419 ஆசிரியர்கள் கல்வி கற்பிக்கின்றனர். கரோனா தொற்றைக் கட்டுப்படுத்த முதல்வர் மாவட்டங்களுக்கு சென்று ஆய்வு நடத்தி வருகிறார். இதுவரை ரூ.7,525 கோடி வரை ஒதுக்கி நோய் தடுப்பு நடவடிக்கை எடுத்துள்ளார். நோய்த் தடுப்பில் தமிழகம் முதலிடத்தில் உள்ளது எனப் பிரதமரே பாராட்டியுள்ளார்.
மதுரையில் 150 நாட்களாக அம்மா கிச்சன் மூலம் 15 லட்சம் உணவுப் பொட்டலங்கள் கரோனாவால் பாதிக்கப்பட்டவர் களுக்கு வழங்கப்பட்டுள்ளன.
ஏரி, கண்மாய்கள், குளங்களை தூர்வாரியதால் 3 சதவீதமாக இருந்த நீர் ஆதாரம் 6 சதவீதமாக உயர்ந்துள்ளது. அரசுப் பள்ளி மாணவர்களின் மருத்துவப் படிப்பை நனவாக்க 7.5 சதவீத உள் ஒதுக்கீடு மூலம் 313 பேருக்கு மருத்துவக் கல்வி வாய்ப்பை முதல்வர் வழங்கியுள்ளார்.
இதுபோல் அனைத்து துறைகளிலும் சிறந்து விளங்கும் மாநிலமாக தமிழகம் உள்ளது. இவ்வாறு அமைச்சர் பேசினார்.
நிகழ்ச்சியில் பேராசிரியர்கள் வேம்புலு, ராஜசேகர், கண்ணன், ராஜு மற்றும் அதிமுக நிர்வாகிகள் ஐயப்பன், திருப்பதி, தமிழழகன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.