முதல்வர் பழனிசாமி இன்று மாலை மதுரை வருவதையொட்டி ஆட்சியர் அலுவலகம் அருகே அமைக்கப்பட்டுள்ள வரவேற்பு வளைவு. படம்: எஸ். கிருஷ்ணமூர்த்தி 
Regional01

முதல்வர் இன்று மாலை மதுரை வருகை முல்லை பெரியாறு கூட்டுக்குடிநீர் திட்டத்தை தொடங்கி வைக்கிறார்

செய்திப்பிரிவு

ரூ.1295.76 கோடி மதிப்பிலான முல்லை பெரியாறு கூட்டுக்குடிநீர் திட்டப் பணிகளை தொடங்கி வைக்க முதல்வர் கே.பழனிசாமி இன்று மாலை மதுரை வருகிறார்.

மதுரை மக்களின் கனவுத் திட்டமான முல்லை பெரியாறு கூட்டுக்குடிநீர் திட்ட பணிக்கான தொடக்க விழா, மதுரை ஆட்சியர் அலுவலக கூடுதல் கட்டிடத் திறப்பு விழா மற்றும் சிவகங்கை மாவட்ட கரோனா தடுப்பு ஆய்வுக்கூட்டம் ஆகிய நிகழ்ச்சிகள் நாளை (வெள்ளிக்கிழமை) நடக்கின்றன.

இதில் பங்கேற்க முதல்வர் கே.பழனிசாமி இன்று மாலை விமானம் மூலம் மதுரை வருகிறார். இரவு மதுரையில் தங்கும் அவர் நாளை காலை மதுரையில் நடக்கும் அரசு நிகழ்ச்சிகளில் கலந்து கொள் கிறார். ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நடைபெறும் நிகழ் வில் ரூ.1295.76 கோடியில் நிறைவேற்றப்படும் பெரியாறு கூட்டுக்குடிநீர் திட்டப் பணிகளைத் தொடங்கி வைக்கிறார். தொடர்ந்து ரூ.31 கோடியில் கட்டப்பட்ட மதுரை ஆட்சியர் அலுவலகக் கட்டிடத்தைத் திறந்து வைக்கிறார். மேலும், ரூ38 கோடியில் நிறை வேற்றப்பட்ட பல்வேறு பணிகளை அவர் தொடங்கி வைக்கிறார்.

அதன்பின் சிவகங்கை செல்லும் அவர், மாலையில் அங்கு நடக்கும் கரோனா ஆய்வுக் கூட்டத்தில் பங் கேற்கிறார். மதுரை, சிவகங்கை மாவட்ட நிகழ்ச்சிகளை முடித்துக் கொண்டு முதல்வர் பழனிசாமி இரவு சென்னை செல்கிறார்.

இந்த நிகழ்ச்சிகளில் பங்கேற்க வரும் அவரை வரவேற்று மாநகர் செயலாளர் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ, புறநகர் மேற்கு மாவட்டச் செயலாளர் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், புறநகர் கிழக்கு மாவட்டச் செயலாளர் ராஜன் செல்லப்பா எம்எல்ஏ ஆகி யோர் தலைமையில் சிறப்பான வரவேற்பு அளிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே நுழைவுப் பகுதியிலும், ஆட்சியர் அலுவலக வளாகத்தில் திறப்புவிழா காணும் கூடுதல் கட்டிடம் முன்பும் பிரம்மாண்ட அலங்காரத் தோரணங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

விழா ஏற்பாடுகளை அமைச் சர்கள் செல்லூர் கே.ராஜூ, ஆர்.பி.உதயகுமார், ஆட்சியர் அன் பழகன், மாநகராட்சி ஆணையர் விசாகன் உள்ளிட்டோர் செய்கின் றனர்.

SCROLL FOR NEXT