TNadu

உயிர்காக்கும் துறையினருக்கு சங்கம் தேவையில்லை உயர் நீதிமன்றம் கருத்து

செய்திப்பிரிவு

மருத்துவர்கள், மருத்துவ பணியாளர்கள், காவல் துறையினர், தீயணைப்புத் துறையினர் என உயிர் காக்கும் துறைகளில் பணிபுரிவோருக்கு சங்கம் வேண்டாம் என உயர் நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.

அரசு மருத்துவர்களின் வேலை நிறுத்தப் போராட்டத்துக்கு தடை விதிக்கக்கோரி மதுரையைச் சேர்ந்த முகமது யூனுஸ்ராஜா உயர் நீதிமன்ற கிளையில் மனு தாக்கல் செய்தார். இந்த மனு நீதிபதிகள் என். கிருபாகரன், பி.புகழேந்தி அமர்வில் விசாரணைக்கு வந்தது.

அப்போது நீதிபதிகள், “24 மணி நேரமும் பணிபுரியும் மருத்துவர்களை விட சில துறைகளில் 3 மணி நேரம் மட்டும் பணிபுரிபவர்களுக்கு கூடுதல் ஊதியம் வழங்கப்படுகிறது. கரோனா காலத்தில் மருத்துவர்களின் சேவை பாராட்டுக்குரியது.

தனியார் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களும் மருத்துவ படிப்பு என்று வரும்போது அரசு மருத்துவக் கல்லூரிகளில் சேரவே விரும்புகின்றனர். அரசு மருத்துவக் கல்லூரிகளில் அனைத்து வசதிகளும் இருப்பதே இதற்கு காரணம். மருத்துவர்கள், மருத்துவப் பணியாளர்கள், காவல் துறையினர், தீயணைப்புத் துறையினர் போன்ற உயிர் காக்கும் துறைகளில் பணிபுரிபவர்களுக்கு சங்கம் என்பது தேவையில்லை” என தெரிவித்தனர்.

பின்னர், தமிழகத்தில் மருத்துவர்கள் காலிப் பணியிடங்கள் எத்தனை உள்ளது. நோயாளிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ற அளவில் போதுமான மருத்துவர்கள் உள்ளார்களா? என்பது குறித்து அரசு பதிலளிக்க உத்தரவிட்டு, விசாரணையை நவ.30-க்கு நீதிபதிகள் தள்ளிவைத்தனர்.

SCROLL FOR NEXT