திருப்பத்தூர் மாவட்டம் மாடப்பள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் கூலித் தொழிலாளி ஜீவா (27). இவரது மனைவி நந்தினி (22). இவர், சென்னையில் உள்ள ஒரு தனியார்மருத்துவமனையில் செவிலியராக பணியாற்றி வந்தார்.
இந்நிலையில், நிறைமாத கர்ப்பிணியான நந்தினிக்கு கடந்த 14-ம் தேதி பிரசவ வலி ஏற்பட்டது. இதையடுத்து, அருகேயுள்ள கதிரம்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு கொண்டு செல்லப்பட்டார். பின்னர், 15-ம் தேதி காலை திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் பிரசவத்துக் காக நந்தினி அனுமதிக்கப்பட்டார். 15-ம் தேதி இரவு நந்தினிக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டு பெண் குழந்தை பிறந்தது.
இந்நிலையில், நள்ளிரவில் நந்தினியின் உடல் நிலை மோச மடைந்ததாகவும் மூச்சுத்திணறல் காரணமாக அவர் ஆபத்தான நிலையில் இருப்பதாக கூறி வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லுமாறு மருத்துவர்கள் அறிவுறுத்தினர்.
இதைத்தொடர்ந்து, வேலூர் அரசு மருத்துவமனையில் பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கெனவே நந்தினி உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். இதனால் ஆத்திரமடைந்த நந்தினியின் உறவினர்கள் நேற்று காலை திருப்பத்தூர் அரசு மருத்துவமனையை முற்றுகையிட்டு ஊழியர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இந்த தகவலறிந்த திருப்பத்தூர் டிஎஸ்பி தங்கவேல் விரைந்து சென்று பேச்சுவார்த்தை நடத்தினார். இதனையேற்று, அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.