Regional02

கரோனா பரவலால் மூடப்பட்ட பரவை காய்கறி மார்க்கெட் இன்று மீண்டும் திறப்பு

செய்திப்பிரிவு

கரோனா பரவல் காரணமாக மூடப்பட்ட பரவை காய்கறி மார்க்கெட் 4 மாதங்களுக்கு பிறகு இன்று முதல் திறக்கப்படுகிறது.

மதுரை விளாங்குடி அருகே பரவையில் தென் தமிழகத்தின் மிகப்பெரிய ஒருங்கிணைந்த காய்கறி மார்க்கெட் செயல்பட்டது. கரோனா ஊரடங்கு காரணமாக பரவை மார்க்கெட் ஜூலை 19 முதல் கப்பலூர் உச்சப்பட்டி துணைக்கோள் நகரம் அருகே தற்காலிகமாக மாற்றப்பட்டது.

இந்நிலையில் பரவையில் இன்று முதல் (நவ. 15) மார்க்கெட் செயல்பட மாவட்ட ஆட்சியர் அனுமதி வழங்கியுள்ளார்.

இது தொடர்பாக மதுரை சென்ட்ரல் மார்க்கெட் காய்கறி மற்றும் அழுகும் பொருள் வியாபாரிகள் ஒருங்கிணைப்புச் சங்கத் தலைவர் எஸ்.மனுவேல் ஜெயராஜ் வெளியிட்டுள்ள அறிக்கை:

பரவையில் இன்று மாலை 5 மணிக்கு மார்க்கெட்டை வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் திறந்து வைக்கிறார். மாவட்ட ஆட்சியர் டி.அன்பழகன், மாநகராட்சி ஆணையர் எஸ்.விசாகன், தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கத் தலைவர் என்.ஜெகதீசன் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.

மார்க்கெட் மாலை 5 மணி முதல் அதிகாலை 2 மணி வரை மார்க்கெட் செயல்படும். சரக்கு ஏற்றும் வாகனங்கள் இரவு 10 மணி முதல் அனுமதிக்கப்படும். லோடு இறக்கவும், ஏற்றவும் தனித்தனியே நேரம் ஒதுக்கப்பட்டுள்ளதால் கூட்ட நெரிசல் குறையும்.

கரோனா பரவலை தடுக்க அனைவரும் சமூக இடைவெளியை பின்பற்றுவது, மார்க்கெட்டிற்குள் நுழையும் முன்பு அனைவரும் கைகளை சோப்பு மற்றும் கிருமி நாசினியால் கைகளை கழுவது, உடல் வெப்ப நிலை அறிதல், கபசுரக் குடிநீர் பருகுதல், முககவசம் அணிதல், அனைத்து வகனங்களின் சக்கரங்களிலும் மருந்து தெளித்தல் உள்ளிட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

SCROLL FOR NEXT