Regional02

லட்சக்கணக்கான தொழிலாளர்களை பாதுகாக்க பட்டாசு தொழில் நடக்கும் மாவட்டங்களில் மாற்றுத்தொழில் மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உத்தரவு

செய்திப்பிரிவு

பட்டாசுத் தொழில் நடக்கும் மாவட்டங்களில் மாற்றுத் தொழில் தொடங்குவது தொடர்பாக மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

மதுரை மாவட்டம் திருமங் கலத்தைச் சேர்ந்த வாசுதேவன், உயர் நீதிமன்றக் கிளையில் தாக்கல் செய்த மனு:

மதுரை மாவட்டத்தில் செக்கானூரணி, திருமங்கலம், கருமாத்தூர் பகுதிகளில் ஏராளமான சிறு பட்டாசு ஆலைகள் உள்ளன. இந்த ஆலைகளில் முறையான பாதுகாப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் பின்பற்றப்படவில்லை. அசம்பாவி தங்கள் நிகழ்ந்தால் இங்கு பணியாற்றும் பெண்கள், குழந்தைகள் மற்றும் பொதுமக்கள் பாதிக்கப்படுவர்.

எனவே, பட்டாசு ஆலைகளில் ஆய்வு செய்து பாதுகாப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதை உறுதி செய்ய அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனுவை விசாாரித்து நீதிபதிகள் என்.கிருபாகரன், பி.புகழேந்தி அமர்வு பிறப்பித்த உத்தரவு:

விருதுநகர் மாவட்டத்தில் மட்டும் பட்டாசு உற்பத்தி மற்றும் விற்பனையில் 5 லட்சம் தொழிலாளர்கள் நேரடியாகவும், 5 லட்சம் தொழிலாளர்கள் மறைமுகமாகவும் ஈடுபட்டுள்ளனர். பட்டாசு தயாரிப்பு நடக்கும் பெரும்பாலான இடங்களில் போதுமான பாதுகாப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை இருப்பதில்லை.

எனவே, விருதுநகர், சிவகாசி, மதுரை பகுதிகளில் எத்தனை பட்டாசு ஆலைகள் இயங்குகின்றன. அந்த ஆலை களில் எவ்வளவு ஊழியர்கள் பணியாற்றுகின்றனர்?

கடந்த 10 ஆண்டுகளில் தமிழகத்தில் நடந்த பட்டாசு ஆலை விபத்துகளில் உயிரிழந்தோர் எத்தனை பேர்? அவர்களில் எத்தனை பேருக்கு இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது? அதிகாரிகள் பட்டாசு ஆலைகளில் அடிக்கடி ஆய்வு மேற்கொண்டு விதிமீறல் தொடர்பாக நடவடிக்கை எடுக்கிறார்களா? என்பது தொடர்பாக மாவட்ட வாரியாக தகவல் தெரிவிக்க வேண்டும்.

மேலும் காற்று மாசு காரணமாக பல மாநிலங்களில் பட்டாசு வெடிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது. பட்டாசுத் தொழில் ஏற்கெனவே நலி வடைந்துள்ள நிலையில் பட்டாசுத் தொழிலாளர்களுக்கு மறுவாழ்வு அளிக்க மாற்று நடவடிக்கை மேற்கொள்ள வேண்டியது அவ சியம்.

எனவே, பட்டாசு தயாரிப்புத் தொழில் நடக்கும் மாவட்டங்களில் வேறு ஏதேனும் தொழில்கள் தொடங்கும் திட்டம் உள்ளதா? மதுரை, விருதுநகர் மாவட்டங்களில் என்னென்ன தொழிற்சாலைகளை அமைக்கலாம்? என்பது தொடர்பாக மத்திய, மாநில தொழில்துறைச் செயலர்கள் பதில் மனுத் தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டனர். பின்னர், விசாரணையை டிச. 4-க்கு நீதிபதிகள் ஒத்தி வைத்தனர்.

SCROLL FOR NEXT