மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசனின் பிறந்த நாளையொட்டி, தஞ்சாவூர் தென்மேற்கு மாவட்ட நற்பணி அணி, இளைஞர் அணி சார்பில் மரக்கன்றுகள் நடுதல் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நேற்று நடைபெற்றன.
கமல்ஹாசன் பிறந்த நாளையொட்டி தஞ்சாவூர் வடக்கு வாசல் அன்பகம் மனவளர்ச்சி குன்றியோருக்கான காப்பகத்தில் உள்ளவர்களுக்கு காலை உணவு வழங்கப்பட்டு, வளாகத்தில் 66 மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது.
தொடர்ந்து, மதியம் தஞ்சாவூர் ஞானம் நகரில் உள்ள சேவாலய முதியோர் இல்லத்தில், முதியவர்களுடன் பிறந்தநாள் கேக் வெட்டி, அவர்களுக்கு மதிய உணவு வழங்கி, மரக்கன்றுகளும் நடப்பட்டன.
இந்நிகழ்ச்சிக்கு மாவட்டச் செயலாளர் எம்.எஸ்.கண்ணன் தலைமை வகித்தார். நற்பணி இயக்க அணி மாவட்டச் செயலாளர் தரும.சரவணன் சிறப்புரையாற்றினார். நிகழ்ச்சியில் தஞ்சாவூர் மாநகரச் செயலாளர்கள் ஜி.சுந்தரமோகன், எம்.செந்தில்குமார், இளைஞர் அணி பிரகதீஸ், சத்தியமூர்த்தி, பிரசன்னா, நற்பணி அணி முருகேசன், சுரேஷ், தியாகு, பிரபாகரன், கோகுலகண்ணன், கவிஞர் ராகவ் மகேஷ், ஐ.டி அணி கார்த்திக், ரங்கேஷ்வரன் மற்றும் பலர் கலந்துகொண்டனர். முடிவில், தஞ்சாவூர் ஒன்றியச் செயலாளர் கலையரசன் நன்றி தெரிவித்தார்.