Regional01

கடைவீதிகளில் கூட்ட நெரிசல் இலவசமாக முகக் கவசம்மக்களுக்கு காவல்துறையினர் வழங்கல்

செய்திப்பிரிவு

தீபாவளி பண்டிகை நெருங்குவதால் திருச்சி மாநகரிலுள்ள கடைவீதிகளில் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது. இவர்களில் பலர் முகக் கவசம் அணியாமலும், சமூக இடைவெளியை கடைபிடிக்காமலும் ஊரடங்கு விதிகளை மீறுவதால் திருச்சியில் கரோனா வைரஸ் தொற்று வேகமாக பரவ வாய்ப்புள்ளதாக மருத்துவர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் அச்சம் தெரிவித்து வருகின்றனர்.

இதை கருத்தில்கொண்டு முகக் கவசம் அணியாதவர்களிடம் ரூ.200 அபராதம் விதிக்கும் நடைமுறையை மாநகரின் அனைத்து பகுதிகளிலும் முழுவீச்சில் செயல்படுத்துமாறு காவல்துறையினருக்கு ஆணையர் ஜெ.லோகநாதன் அறிவுறுத்தியுள்ளார். அதேசமயம் முகக் கவசம் அணிவதன் அவசியம் குறித்து தன்னார்வலர்களுடன் இணைந்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தவும் உத்தரவிட்டார்.

இதையடுத்து மாநகர காவல்துறை சார்பில் சாலை சந்திப்புகள் மற்றும் பொதுமக்கள் அதிகம் கூடக்கூடிய இடங்களில் முகக் கவசம் குறித்த விழிப்புணர்வு துண்டறிக்கைகள் விநியோகிக்கப்பட்டு வருகின்றன.

மேலும் முகக் கவசம் அணியாதவர்களை அழைத்து, அதன் முக்கியத்துவம் குறித்து விளக்குவதுடன் அவர்களுக்கு இலவசமாக முகக் கவசங்களையும் வழங்கி வருகின்றனர்.

SCROLL FOR NEXT