தூத்துக்குடியில் யானைத் தந்தம் கடத்திய இருவர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து 4 யானைத் தந்தங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் எஸ்ஐ சங்கர் மற்றும் காவலர்கள் நேற்று தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். கணேசன் நகர் பகுதியில் ரோந்து சென்றபோது 2 இருசக்கர வாகனங்களில் வந்த இருவர் போலீஸாரைக் கண்டதும் அவசர அவசரமாக தப்பிச் செல்ல முயன்றனர்.
இதனால் சந்தேகமடைந்த போலீஸார் இருவரையும் மடக்கிப் பிடித்து விசாரணை செய்ததில் அவர்கள் தூத்துக்குடி கணேசன் காலனி யைச் சேர்ந்த ராஜவேல் (33) மற்றும் முனியசாமி (43)என்பதும், மீன் வியாபாரம் செய்வதும் தெரியவந்தது. விசாரணையில் அவர்கள் முன்னுக்குபின் முரணாக பதிலளித்ததால் அவர்கள் வந்த இரு சக்கர வாகனங்களை போலீஸார் சோதனை செய்தனர்.
அப்போது ஒரு வாகனத்தில் பெட்ரோல் டேங்க் கவருக்குள் 4 யானை தந்தங்கள் இருந்தன.அவர்களிடம் விசாரணை நடத்தியதில் 4 யானைத் தந்த துண்டுகளையும் குலசேகரன்பட்டினத்தில் நாடோடி மக்களிடம் ரூ.3,000-க்கு விலைக்கு வாங்கியதும், அவற்றை தூத்துக்குடியில் அதிக விலைக்கு விற்க முயன்றதும் தெரியவந்தது.
இதையடுத்து இருவரையும் போலீஸார் கைது செய்து, இருசக்கர வாகனங்கள், யானை தந்தங்களை பறிமுதல் செய்தனர். பின்னர் யானைத் தந்தங்களை வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர்.