கொலை செய்யப்பட்ட ராமையா தாஸ். 
Regional02

வைகுண்டம் அருகே வயலில் ஆடு மேய்ந்த தகராறில் பாஜக நிர்வாகி கொலை பைக் தீவைத்து எரிப்பு, சாலை மறியல்

செய்திப்பிரிவு

தூத்துக்குடி மாவட்டம் வைகுண்டம் அருகே வயலில் ஆடு மேய்ந்த தகராறில் பாஜக நிர்வாகி வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இதனைக் கண்டித்து அவரது உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். மோட்டார் சைக்கிள், வைக்கோல் படப்புக்கு தீ வைக்கப்பட்டது. போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.

வைகுண்டம் அருகேயுள்ள தென்திருப்பேரை தெற்கு கோட்டூரைச் சேர்ந்தவர் விவசாயி ராமையா தாஸ் (50). இவர், பாஜக அமைப்புசாரா பிரிவில் மாவட்டச் செயலாளராக இருந்தார். இவருக்கு சொந்தமான விளைநிலத்தில் பயிரிடப்பட்டுள்ள உளுந்து பயிரை கடந்த சில தினங்களுக்கு முன் தென்திருப்பேரையைச் சேர்ந்த மாரி மகன் இசக்கி (21) என்பவருடைய ஆடுகள் மேய்ந்துள்ளன.

இதனை ராமையா தாஸ் கண்டித்ததால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. கிராம மக்கள் சமாதானம் செய்து வைத்தனர். நேற்று காலை 5 மணியளவில் ராமையாதாஸ், தென்திருப்பேரையில் உள்ள கடையில் டீ குடித்துக் கொண்டிருந்த போது அங்கு வந்த இசக்கி, அவரை சரமாரியாக அரிவாளால் வெட்டிவிட்டு ஓடிவிட்டார். இதில், பலத்த காயமடைந்த ராமையாதாஸ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இசக்கியின் வீடு கற்கள் வீசிதாக்கப்பட்டது. வீட்டருகே நிறுத்தப்பட்டிருந்த இரு சக்கர வாகனம் மற்றும் அப்பகுதியில் இருந்த வைக்கோல் படப்புக்கு தீ வைக்கப்பட்டது.

மேலும், ராமையாதாஸின் உறவினர்கள் சுமார் 100 பேர் திரண்டு திருச்செந்தூர்- திருநெல்வேலி நெடுஞ்சாலையில் மறியலில் ஈடுபட்டனர். அவர்களுடன், மாவட்ட எஸ்பி ஜெயக்குமார், திருச்செந்தூர் கோட்டாட்சியர் தனப்பிரியா ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர். ராமையாதாஸ் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை மற்றும் ஒரு கோடி ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும். கொலையாளியை வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும் என அவர்கள் வலியுறுத்தினர்.

குற்றவாளியை உடனே கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், மற்ற கோரிக்கைகள் குறித்து அரசின் கவனத்துக்கு கொண்டு செல்லப்படும் எனவும் அதிகாரிகள் உறுதியளித்தனர்.

இதையடுத்து மறியலை கைவிட்டு அவர்கள் கலைந்து சென்றனர். சுமார் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அப்பகுதியில், போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.

SCROLL FOR NEXT