மற்றவை

உ.பி.யில் பெண் வேட்பாளர்கள் மிகவும் குறைவு

ஆர்.ஷபிமுன்னா

மக்களவைத் தேர்தலுக்காக உத்தரப் பிரதேச மாநிலத்தில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் எண்ணிக்கை பத்து சதவிகிதத்தைவிடக் குறைவாக உள்ளது. ஜனநாயகத்தில் பெண்கள் பங்கீடு குறித்து பேசும் தேசிய கட்சிகளுக்கு இந்தப் புள்ளிவிவரம் ஒரு சறுக்கல் எனக் கருதப்படுகிறது.

கடந்த முறை போட்டியிட்டதை விட உபியில் இந்தமுறை அதிகமான பெண் வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இங்கு நடைபெறும் ஆறுகட்ட தேர்தலில் போட்டியிடும் மொத்த வேட்பாளர்க ளான 1288-ல், பெண்கள் எண்ணிக்கை 125 மட்டுமே.

பெண்களுக்காக 33 சதவிகித இட ஒதுக்கீட்டை கோரும் தேசிய கட்சிகளில் காங்கிரஸ் மிக அதிகமாக 12, பாரதிய ஜனதா மற்றும் சமாஜ்வாதி கட்சிகள் தலா 11, ஆம் ஆத்மி 10, பகுஜன் சமாஜ் கட்சியில் 7 மற்றும் சுயேச்சையாக 32 பெண்களும் போட்டியிடுகின்றனர்.

அரசியலில் போட்டியிட வயது வரம்பு கிடையாது எனக் கூறப்படுகிறது. இதை நிரூபிக்கும் வகையில், மொத்தம் உள்ள 125 பெண்களில் 25 முதல் 75 வயது வரையிலானவர்கள் வேட்பாளர்க ளாக உள்ளனர். இதில், 5 பேர் மட்டும் 25 வயதிற்குட்பட்டவர்கள். மொராதாபாத்தில் காங்கிரஸ் வேட்பாளராக போட்டியிடும் நூர்பானுவின் வயது மட்டும் 75. மொத்தத்தில் மூன்றில் ஒரு பங்கு பெண்கள், 30 வயதிற்குட்பட்டவர்கள்.

உபியில் 2009 மக்களவை தேர்தலில் பெண் வேட்பாளர்கள் எண்ணிக்கை 7.3 சதவிகிதமாக இருந்தது. இது 2014-ல் 9.7 சதவிகிதமாக உயர்ந்திருந்தாலும் இது, குறைவான எண்ணிக்கைதான் எனக் கருதப்படுகிறது. பெண் வேட்பாளர்களில் பாஜகவின் ஹேமாமாலினி, காங்கிரசின் நக்மா மற்றும் ராஷ்டிரிய லோக் தளக் கட்சியின் ஜெயப்பிரதா ஆகியோர் திரைப்பட நட்சத்திரங்க ளாவர். அதிலும், மூவரும் தமிழ்திரைப்படங்கள் மூலம் நட்சத்திரங்களானவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இதுவன்றி, பாஜக வேட்பாளர் நரேந்திர மோடியை எதிர்த்துப் போட்டியிடும் கமலாபாய் உட்பட மூன்று திருநங்கைகளும் வேட்பாளர்களாக உள்ளனர்.

2009-ன் 7.3 சதவிகிதமாக போட்டியிட்ட வேட்பாளர்களில் 12 பெண்கள் மக்களவைக்கு சென்றனர். 2014-ன் 9.7 சதவிகித பெண்களில் எத்தனை பெண்கள் மக்களவைக்கு செல்கிறார்கள் என்பது மே 16-ம் தேதி தெரியவரும்.

SCROLL FOR NEXT