நிதிஷ் குமாரின் பிஹார் முதல்வர் பதவியை ராஜினாமா செய்யும் முடிவு இறுதியானது என ஐக்கிய ஜனதா தளம் கட்சித் தலைவர் சரத் யாதவ் தெரிவித்துள்ளார்.
மக்களவைத் தேர்தல் தோல்விக்குப் பொறுப்பேற்று பிஹார் முதல்வர் நிதிஷ் குமார் தனது பதவியை கடந்த சனிக்கிழமை ராஜினாமா செய்தார்.
பிஹாரில் மொத்தமுள்ள 40 மக்களவைத் தொகுதிகளில் பாஜக கூட்டணி 31 இடங்களைக் கைப்பற்றியது. ஆளும் ஐக்கிய ஜனதா தளத்துக்கு 2 இடங்கள் மட்டுமே கிடைத்துள்ளன. இதைத் தொடர்ந்து நிதிஷ் குமார் தனது பதவியை ராஜினாமா செய்தார்.
அவர் ராஜினாமா தொடர்பாக பல்வேறு தகவல்கள் வெளியாகிவந்தன. இன்று ஐக்கிய ஜனதா தள கட்சியின் ஆலோசனைக் கூட்டம் நடைபெறவிருக்கிறது.
இந்நிலையில், ஐக்கிய ஜனதா தளம் கட்சித் தலைவர் சரத் யாதவ் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர், "நிதிஷ் குமாரின் பீகார் முதல்வர் பதவியை ராஜினாமா செய்யும் முடிவு இறுதியானது. இந்த முடிவு தேச நலன், கட்சி நலன், நிதிஷ் குமாரின் தனிப்பட்ட நலன் கருதியே எடுக்கப்பட்டது. மிகுந்த சிரமத்திற்குப் பிறகு இம்முடிவு எடுக்கப்பட்டாலும், இந்த முடிவே சரியானதும், இறுதியானதும் ஆகும்" என்றார்.