வாரணாசி தொகுதியில் ஆம் ஆத்மிக்கு மகத்தான வெற்றி கிடைக்கும் என்று அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளரும், அந்தத் தொகுதியின் வேட்பாளருமான அரவிந்த் கேஜ்ரிவால் நம்பிக்கை தெரிவித்தார்.
பாஜக பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி குஜராத்தின் வதோதரா மற்றும் உத்தரப் பிரதேசத்தின் வாரணாசி ஆகிய இரு தொகுதிகளில் போட்டியிடுகிறார். இதில் வதோதரா தொகுதியில் தேர்தல் நடந்து முடிந்துவிட்டது. வாரணாசி தொகுதியில் வரும் 12–ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.
வாரணாசி தொகுதியில் மோடியை எதிர்த்து ஆம் ஆத்மி தலைவர் கேஜ்ரிவால் களம் இறங்கியுள்ளார். காங்கிரஸ் சார்பில் உள்ளுர் எம்.எல்.ஏ. அஜய் ராய் நிறுத்தப்பட்டுள்ளார்.
இந்த நிலையில் இன்று வாரணாசி தொகுதிக்கு உள்பட்ட கிராமப்புற பகுதிகளில் ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கேஜ்ரிவால் வாக்கு சேகரித்தார்.
அப்போது அவர் பேசுகையில், "வாரணாசியில் ஆம் ஆத்மி மகத்தான வெற்றியை பெரும் என்பது உறுதியாகிவிட்டது. பாரதிய ஜனதா கட்சி, வாரணாசியில் வெற்றி பெற மதாவத - சாதி அரசியல், ஊடகங்களுக்கு லஞ்சம் அளித்தல் உள்ளிட்டவற்றை செய்தாலும், நரேந்தி மோடி இங்கு கடும் தோல்வி அடைவார்.
ஹெலிகாப்டரில் இரண்டு மணி நேரம் தொகுதி முழுவதிலும் சுற்றிச் செல்பவரால் எப்படி சேவை செய்ய முடியும் என்று வாரணாசி மக்கள் வியப்படைந்துள்ளனர்" என்றார்.
அரவிந்த் கேஜ்ரிவாலுக்கு ஆதரவாக அக்கட்சியின் முக்கிய தலைவர்களான பக்வந்த் மான், குல் பனாக், விஷால் தாத்லினி உள்ளிட்டோர் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.