சென்னை ராயப்பேட்டையில் வாக்காளர் களுக்கு திமுகவினர் பணம் கொடுத் ததை அதிமுகவினர் தடுத்ததால் இரு கட்சியினரும் பயங்கரமாக மோதிக் கொண்டனர். இதில் அதிமுகவை சேர்ந்த வழக்கறிஞருக்கு தலையில் அரிவாள் வெட்டு விழுந்தது.
சென்னை ராயப்பேட்டை 118 வது வார்டில் சனிக்கிழமை இரவு 11 மணியளவில் வாக்காளர்களுக்கு திமுகவினர் பணம் கொடுப்பதாக அதிமுகவினருக்கு தகவல் கிடைத்தது. அதைத் தொடர்ந்து அதிமுக பகுதி நிர்வாகிகள் பாபு, வழக்கறிஞர் சிவகுமார், பழனிச்சாமி, மணி உள்ளிட்ட பலர் அந்த பகுதிக்கு சென்றனர். அப்போது அங்கு ஓட்டுக்கு பணம் கொடுத்ததாக வினோத் என்பவரை பிடித்து, தேர்தல் அதிகாரிகளிடம் ஒப் படைத்தனர்.
இதையறிந்த திமுகவினர் அந்த பகுதிக்கு கூட்டமாக வந்தனர். இரு கட்சியினரும் காரசாரமாக வாக்குவாதம் செய்து கொண்டிருந்த நிலையில், திடீரென அடிதடியில் ஈடுபட்டனர்.
கலவர பகுதியானது
இதனால் அந்த இடமே கலவர பகுதி போல மாறியது. இந்த மோதலின் போது வழக்கறிஞர் சிவகுமாரின் தலையில் யாரோ ஒருவர் அரிவாளால் வெட்டினார். இதில் அவரது தலை உடைந்து ரத்தம் வெளியேறியது. அவர் உடனடியாக அருகில் இருந்த தனியார் மருத்துவமனையில் அனுமதிக் கப்பட்டார்.
ராயப்பேட்டை காவல் உதவி ஆணையர் ராமச்சந்திரன் தலைமையில் போலீஸார் அந்த பகுதிக்கு விரைந்து வந்து மோதலை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக ராயப்பேட்டை காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து திமுகவை சேர்ந்த யுவராஜ், ஜெய குமார், கருணாதங்கம், வினோத், கேசவன் ஆகிய 5 பேரை கைது செய்தனர்.
இவர்கள் மீது கொலை முயற்சி, கொலை மிரட்டல், கும்பலாக வந்து தாக்குதல் உள்ளிட்ட 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் இந்த மோதல் சம்பவம் தொடர்பாக திமுக பகுதி செயலாளர் அன்புதுரையை காவல் துறையினர் தேடி வருகின்றனர்.
தேர்தல் பிரிவில் புகார்
இது குறித்து அதிமுக வழக்கறிஞர் பிரிவைச் சேர்ந்த திருநாராயணன் உள்ளிட்டோர், தலைமை தேர்தல் அதிகாரி அலுவலகத்தில் ஞாயிற்றுக் கிழமை புகார் மனு அளித்துள்ளனர்.