தேர்தலில் அதிமுகவுக்கு அதிக வாக்குகளைப் பெற்றுத்தரும் தொகுதி பொறுப்பாளர்களுக்கு 5 பவுன் தங்கம் வழங்கப்படும் என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் களம் களைகட்டியுள்ளது. தமிழகத்தில் அதிமுக, திமுக ஆகிய பிரதான கட்சியினர் தங்களின் பிரச்சாரத்தை முழுவீச்சில் மேற்கொண்டு வருகின்றனர்.
ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் அதிமுக செயல் வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. அப்போது திருப்பூர் மக்களவைத் தொகுதியில் அதிமுக சார்பில் வேட்பாளர் எம்எஸ்எம் ஆனந்தன் அறிமுகப்படுத்தப்பட்டார். இந்நிகழ்ச்சியில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கலந்துகொண்டார்.
அப்போது பேசிய அவர், ''அதிமுகவின் சாதனைகளை மக்களிடம் எடுத்துக்கூறினாலே மக்களிடம் அதிக வாக்குகளைப் பெற முடியும். அதிக வாக்குகளைப் பெற்றுத் தரும் தொகுதி பொறுப்பாளர்களுக்கு 5 பவுன் தங்கம் வழங்கப்படும்.
வாரிசு அரசியல் என்பது இன்றல்ல; காங்கிரஸ் மற்றும் திமுகவிலும் அப்படித்தான் இருக்கிறது. தந்தை (கருணாநிதி) முதல்வர், மகன் (ஸ்டாலின்) துணை முதல்வர், மகள் (கனிமொழி) நாடாளுமன்ற உறுப்பினர். மருமகனும் (முரசொலி மாறன்) மத்திய அமைச்சர். இது எங்குமே இல்லை'' என்றார் செங்கோட்டையன்.