ஒட்டப்பிடாரம் தொகுதியில் இடைத்தேர்தல் ஒத்திவைக்கப்பட்ட நிலையில் வழக்கைத் தொடுத்த கிருஷ்ணசாமி வாபஸ் வாங்குவதாக தெரிவித்ததால் இத்தொகுதிக்கு எதிரான வழக்கை நீதிமன்றம் முடிவுக்குக் கொண்டுவந்தது.
2016-ம் ஆண்டு சட்டப்பேரவை பொதுத்தேர்தலில் ஒட்டப்பிடாரம் தொகுதியில் அதிமுக சார்பில் சுந்தர்ராஜனும், புதிய தமிழகம் சார்பில் கிருஷ்ணசாமியும் போட்டியிட்டனர். 493 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவினார். அதிமுக வேட்பாளர் சுந்தர்ராஜன் வெற்றி பெற்றார். இதை எதிர்த்து கிருஷ்ணசாமி வழக்கு தொடர்ந்தார்.
அரசு மணல் குவாரி ஒப்பந்தத்தை மறைத்தும், தேர்தலில் அதிகார துஷ்பிரயோகம் செய்தும் சுந்தர்ராஜன் வெற்றி பெற்றதாக கிருஷ்ணசாமி வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு நீதிபதி கே.ரவிச்சந்திரபாபு முன் நிலுவையில் உள்ளது.
இந்நிலையில் டிடிவி தினகரன் அணிக்குத் தாவினார் சுந்தர்ராஜன். முதல்வருக்கு எதிராக ஆளுநரிடம் மனு அளித்த 18 எம்.எல்.ஏக்களைத் தகுதி நீக்கம் செய்த விவகாரத்தில் சுந்தர்ராஜன் பதவி இழந்தார். இவர் உட்பட 18 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்கத்தை 3 பேர் கொண்ட உயர் நீதிமன்ற நீதிபதிகள் அமர்வு உறுதி செய்ததை அடுத்து தொகுதி காலியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில் கடந்த 10-ம் தேதி தேர்தல் ஆணையம் காலியாக உள்ள 21 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் அறிவிப்பில் ஒட்டப்பிடாரம் உள்ளிட்ட 3 தொகுதிகளை நீதிமன்ற வழக்கைக் காரணம் காட்டி ஒத்திவைத்தது. இதை எதிர்த்து திமுக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.
இந்நிலையில் ஒட்டப்பிடாரம் தொகுதியில் போட்டியிட்ட புதிய தமிழகம் தலைவர் கிருஷ்ணசாமி இன்று உயர் நீதிமன்றத்தில் புதிய மனு ஒன்றைத் தாக்கல் செய்தார். அதில் ஒட்டப்பிடாரம் தொகுதியில் தேர்தல் செல்லாது என தொடர்ந்த வழக்கை வாபஸ் பெற தன்னை அனுமதிக்க வேண்டும் எனவும், வழக்கை ரத்து செய்து ஒட்டப்பிடாரம் தொகுதியில் தேர்தல் நடத்த உத்தரவிட வேண்டும் என்றும் கோரியிருந்தார்.
இதை ஏற்ற நீதிபதி ரவிச்சந்திரபாபு கிருஷ்ணசாமி மனு அடிப்படையில் ஒட்டப்பிடாரம் தேர்தல் வழக்கை முடித்து வைப்பதாகவும், தேர்தல் தொடர்பான வழக்கு எதுவும் இல்லாததால் தேர்தல் ஆணையம் அதன் நடைமுறைப்படி முடிவெடுக்கலாம் என உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டார். இதன்மூலம் ஒட்டப்பிடாரம் தொகுதிக்கான பிரச்சினை முடிவுக்கு வந்துள்ளது.