மக்களவைத் தேர்தலின் போது டி.கே.ராஜேந்திரன் டிஜிபியாக செயல்படத் தடை விதித்து, வேறொரு நியாயமான அதிகாரியை டிஜிபியாக நியமிக்க உத்தரவிட வேண்டும் என்று கதிரேசன் என்பவர் உயர் நிதிமன்ற மதுரைக் கிளையில் முறையிட்டுள்ளார்.
மதுரையைச் சேர்ந்த கதிரேசன் என்பவர் தரப்பில் அவரது வழக்கறிஞர் கண்ணன், ''டிஜிபி ராஜேந்திரன் மீது குட்கா முறைகேடு உள்ளிட்ட பல புகார்கள் உள்ளன. அதோடு, மத்திய, மாநில அரசுகளின் பரிந்துரையின் அடிப்படையிலேயே அவர் இரண்டாண்டு பணி நீட்டிப்பு பெற்றுள்ளார். ஆகவே, மக்களவைத் தேர்தலின் போது அவர் மத்திய, மாநில அரசுகளுக்கு சாதகமாக செயல்படலாம்.
மேலும், வாக்குக்காகப் பணம் கொடுப்பதற்காக ஆம்புலன்ஸ்களில் கூட பணம் எடுத்துச் செல்லப்படும் நிலையில், தேர்தல் விதிமுறை மீறல்கள் தொடர்பாக அவர் உரிய நடவடிக்கை எடுப்பார் என எதிர்பார்க்க இயலாது. ஆகவே, மக்களவைத் தேர்தலின் போது டி.கே.ராஜேந்திரன் டிஜிபியாக செயல்படத் தடை விதித்து, வேறொரு நியாயமான அதிகாரியை டிஜிபியாக நியமிக்க உத்தரவிட வேண்டும். இதனை அவசர மனுவாக விசாரிக்க வேண்டும்'' என முறையிட்டார்.
அதனை மனுவாகத் தாக்கல் செய்ய உத்தரவிட்ட நீதிபதிகள் கிருபாகரன், எஸ்.எஸ்.சுந்தர் ஆகியோர் நாளை விசாரணைக்கு எடுப்பதாகத் தெரிவித்தனர்.