தூத்துக்குடி மக்களவைத் தொகுதியில் போட்டியிட தமிழ் பேரரசு கட்சியின் தலைவரான இயக்குநர் வ.கவுதமன் வேட்புமனு தாக்கல் செய்திருந்தார். நேற்று முன்தினம் நடந்த பரிசீலனையில், அவரது வேட்புமனு ஏற்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.
இதற்கிடையில், திமுக வேட்பாளர் கனிமொழி, பாஜக வேட்பாளர் தமிழிசையின் மனுக்கள் மீதான பரிசீலனை பிற்பகலுக்கு ஒத்திவைக்கப்பட்டது. இரு தரப்பினரும் உரிய விளக்கங்கள் அளித்த பிறகு, அவர்களது வேட்புமனுக்கள் ஏற்கப்படுவதாக, தேர்தல் நடத்தும் அலுவலர் சந்தீப் நந்தூரி அறிவித்தார். அதன்பிறகு அங்கு வந்த கவுதமன், இதுகுறித்து கேள்வி எழுப்பினார். எழுத்துபூர்வ மனுவாக அளித்தால் விளக்கம் அளிப்பதாக தேர்தல் அதிகாரி கூறினார். இதையடுத்து, கவுதமன் ஒரு மனு அளித்தார்.
இந்நிலையில், தேர்தல் நடத்தும் அலுவலர் அறைக்கு நேற்று மதியம் 12 மணி அளவில் வந்த கவுதமன், தனது வேட்புமனுவை வாபஸ் பெற்றார். ‘‘கனிமொழி, தமிழிசையின் வேட்புமனுக்களை ஏற்றுக்கொண்டது ஜனநாயகப் படுகொலை. எனவே, தேர்தலில் இருந்து விலகுகிறேன்’’ என்றார்.