மற்றவை

மக்கள் நீதி மய்யத்தின் மாநிலப் பொறுப்பாளர் சி.கே.குமரவேல் விலகல்: உட்கட்சி பூசல் காரணமா? அல்லது திமுக நெருக்கடியா?

என்.முருகவேல்

மக்கள் நீதி மய்யம் கட்சியின் மாநிலப் பொறுப்பாளர் சி.கே.குமரவேல் அக்கட்சியிலிருந்து விலகியுள்ளார்.

மக்கள் நீதி மய்யம் கட்சியின் மாநிலச் செயற்குழு உறுப்பினரும், கடலூர், நாகை மண்டல பொறுப்பாளருமான கடலூரைச் சேர்ந்த சி.கே.குமரவேல், கடலூர் மக்களவைத் தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்படவிருந்த நிலையில், இன்று (திங்கள்கிழமை) அக்கட்சியிலிருந்து விலகுவதாக கட்சித் தலைமையிடம் கடிதம் கொடுத்துள்ளார்.

இதுதொடர்பாக சி.கே.குமரவேலுவிடம் கேட்டபோது, "உட்கட்சிப் பூசல் அதிகமாக இருப்பதாக உணர்ந்து கடந்த சனிக்கிழமை கட்சித் தலைவர் கமல்ஹாசனிடம் எடுத்துக் கூறினேன். அவர் அதற்கு சரியான பதிலையும் கூறாததால், கட்சித் தலைமைக்கு ராஜினாமா கடிதம் அனுப்பி வைத்துள்ளேன்" என்றார்.

இந்தக் காரணம் கூறப்பட்டாலும், சி.கே.குமரவேல், கெவின்கேர் என்ற நிறுவன குழுமத்தைச் சேர்ந்தவர். இந்த நிறுவனத்தில் திமுக எம்.பி.கனிமொழியின் பங்கு உள்ளது. கருணாநிதியின் குடும்பத்துக்கும் உறவும் கூட. இதனால் சி.கே.குமரவேல் விலகலுக்குக் காரணம் கருணாநிதி குடும்பத்தினரின் நெருக்கடி எனவும் கூறப்படுகிறது.

          
SCROLL FOR NEXT