‘‘இஸ்லாமிய வெறுப்பு வளர்கிறது; முஸ்லிம் நாடுகள் தடுக்க தவறி விட்டன’’- இம்ரான் கான் ஆதங்கம்

By செய்திப்பிரிவு

இஸ்லாமாபாத்: அமெரிக்க இரட்டை கோபுர தீவிரவாத தாக்குதலுக்குப் பிறகு இஸ்லாமிய வெறுப்பு வளர்ந்தது, ஆனால் இஸ்லாம் மதம் தீவிரவாதத்தை ஏற்கவில்லை என்பதை முஸ்லிம் நாடுகள் ஓங்கி ஒலிக்கத் தவறி விட்டதாகவும் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் வேதனை தெரிவித்தார்.

இஸ்லாமாபாத்தில் இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பு கூட்டத்தில் உரையாற்றிய இம்ரான் கான் பேசும்போது இதனை கூறினார். அப்போது அவர் கூறியதாவது:

இஸ்லாம் சமயத்தில் மீதவாதம், தீவிரவாதம் என எதுவும் இல்லை. மதநம்பிக்கையில் தீவிரவாதத்துக்கு எந்தவிதத்திலும் தொடர்பும் இல்லை. இஸ்லாத்தை பயங்கரவாதத்துடன் ஒப்பிட்டு மேற்கத்திய நாடுகள் மிதவாத மற்றும் தீவிர முஸ்லிம்கள் என எவ்வாறு வேறுபடுத்திப் பார்க்க முடியும்?

நான் எனது வாழ்நாளின் பெரும்பகுதியை இங்கிலாந்தில் செலவிட்டுள்ளேன், சர்வதேச விளையாட்டு வீரராக உலகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்துள்ளேன். பெரும்பாலான மக்களை விட மேற்கத்திய நாகரீகத்தை நான் நன்றாக புரிந்துகொள்கிறேன். 9/11க்குப் பிறகு இது (இஸ்லாமிய வெறுப்பு) வளர்ந்து வருவதை நான் காண்கிறேன்.

இந்த இஸ்லாமோபோபியா தொடர்ந்து வளர்ந்து வருகிறது. இது வருதத்தை தருகிறது. இந்த தவறான கட்டுக்கதையை சரி செய்ய முஸ்லிம் நாடுகள் எதுவும் செய்யவில்லை. எந்த மதத்திற்கும் பயங்கரவாதத்திற்கும் எப்படி தொடர்பு இருக்க முடியும்? இஸ்லாம் பயங்கரவாதத்துடன் சமப்படுத்தப்பட்டு தவறான பிரச்சாரம் செய்யப்படுகிறது.

மேற்கத்திய நாட்டில் ஒரு மனிதன் எப்படி மிதவாத முஸ்லிம் மற்றும் தீவிர முஸ்லிம் என்று வேறுபடுத்துகிறான். எப்படி அவ்வாறு வேறுபடுத்த முடியும். ஏனெனில் மசூதிக்குள் நுழைந்து ஒருவன் அனைவரையும் சுட்டுக் கொன்றான். இது தவறான விமர்சனத்துக்கு ஆளாக்கப்பட்டு விட்டது.

துரதிர்ஷ்டவசமாக நாம் இந்த தவறான பிரச்சாரத்தை தடுக்க எதுவும் செய்யவில்லை. முஸ்லிம் நாடுகளின் தலைவர் இது குறித்து ஒரு நிலைப்பாட்டை எடுத்திருக்க வேண்டும். ஆனால் பல நாட்டின் தலைவர்கள் தாங்கள் மிதவாதிகள் என்று கூறுகிறார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE