உலகம்

கரோனா அதிகரிப்பு: ராணுவத்தின் உதவியை நாடும் ஆஸ்திரேலியா

செய்திப்பிரிவு

ஆஸ்திரேலியாவில் கரோனாவைக் கட்டுப்படுத்த அந்நாட்டு அரசு ராணுவத்தின் உதவியை நாடியுள்ளது.

இதுகுறித்து ஊடகங்கள் தரப்பில், “ஆஸ்திரேலியாவில் கரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. குறிப்பாக சிட்னியில் கரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக அங்கு ஆகஸ்ட் மாதம் 28ஆம் தேதிவரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் ஊரடங்கை மக்கள் சரியாகக் கடைப்பிடிக்க ராணுவத்தின் உதவியை அரசு நாடியுள்ளது” என்று செய்தி வெளியாகியுள்ளது.

ஆஸ்திரேலியாவில் இதுவரை 30 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். உலக அளவில் இந்தியா உட்பட பல நாடுகளில் கரோனா 2-ம் அலையின் வேகம் சற்று தணிந்துள்ள போதிலும் முற்றாக நீங்கவில்லை. அதேசமயம் ஒருசில நாடுகளில் அதன் தாக்கம் தீவிரமாகவே இருந்து வருகிறது.

கரோனா வைரஸ் பாதிப்பு அதிகமுள்ள நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா, இந்தியா, பிரேசில், பிரான்ஸ், ரஷ்யா ஆகியவை முதல் 5 இடங்களில் உள்ளன. உலக அளவில் கரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 19 கோடியைக் கடந்துள்ளது. கரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து 17 கோடிக்கும் அதிகமானோர் குணமடைந்துள்ளனர். கரோனா தொற்று ஏற்பட்டு இதுவரை 40 லட்சத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

SCROLL FOR NEXT