உலகில் அதிகமான காற்று மாசு ஏற்பட இந்தியா, சீனா, ரஷ்யாதான் காரணம்: ட்ரம்ப் குற்றச்சாட்டு

உலகில் அதிகமான காற்று மாசு ஏற்படுவதற்கு இந்தியா, சீனா, ரஷ்யா ஆகிய நாடுகள் நச்சு வாயுக்களை அதிகமாக வெளியிடுவதே காரணம் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் குற்றம் சாட்டினார்.

அதேசமயம், சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதில் அதிகமான அக்கறையுடன் பணிகளை தனது அரசு செய்துவருவதாகவும் அதிபர் ட்ரம்ப் பெருமிதம் கொண்டார்.

அமெரிக்க அதிபர் தேர்தல் நவம்பர் மாதம் நடக்கிறது. இதில் ஜனநாயகக் கட்சி சார்பில் ஜோ பிடனும், துணை அதிபர் வேட்பாளராக கமலா ஹாரிஸும் போட்டியிடுகின்றனர். குடியரசுக் கட்சி சார்பில் அதிபராக மீண்டும் அதிபர் ட்ரம்ப்பும், துணை அதிபர் பதவிக்கு மைக் பென்ஸும் போட்டியிடுகின்றனர்.

அதிபர் தேர்தலுக்கான பிரச்சாரம் சூடுபிடித்து வரும் நிலையில் கரோனாவில் ட்ரம்ப் பாதிக்கப்பட்டு 10 நாட்களாக பிரச்சாரம் ஏதும் செய்யாமல் இருந்தார். தற்போது கரோனாவிலிருந்து மீண்ட நிலையில் மீண்டும் தனது பிரச்சாரத்தை அதிபர் ட்ரம்ப் தொடங்கியுள்ளார்.

நார்த் கரோலினாவில் நேற்று நடந்த தேர்தல் பிரச்சாரத்தில் அதிபர் ட்ரம்ப் பங்கேற்றார். அப்போது அவர் பேசுகையில், உலகில் காற்று மாசு ஏற்படுவதற்கு இந்தியா, சீனா, ரஷ்யா ஆகிய நாடுகள்தான் பெரும்பாலும் காரணம் என்று குற்றம் சாட்டினார்.

ஆனால், உண்மையில் பாரிஸ் பருவநிலை மாறுபாடு ஒப்பந்தத்தில் இருந்து கடந்த 2017-ம் ஆண்டு அமெரிக்கா வெளியேறுகிறது என அதிபர் ட்ரம்ப் திடீரென அறிவித்தார். அமெரிக்கா அளிக்கும் கோடிக்கணக்கான டாலர் பணம் இந்தியா, சீனா உள்ளிட்ட நாடுகளுக்கே வழங்கப்படுகின்றன.

இந்த ஒப்பந்தத்தால் அமெரிக்காவில் கோடிக்கணக்கான வேலைவாய்ப்புகள் பறிக்கப்படுகின்றன. கச்சா எண்ணெய், எரிவாயு, நிலக்கரி, உற்பத்தித் துறையும் பாதிக்கப்பட்டுள்ளன. இந்த ஒப்பந்தம் அமெரிக்காவுக்கு விரோதமானது எனக் கூறி வெளியேறினார்.

இந்நிலையில், அதே கருத்தை முன்வைக்கும் விதமாக நேற்று தேர்தல் பிரச்சாரத்தில் அதிபர் ட்ரம்ப் பேசியுள்ளார்.

அவர் பேசுகையில், ''என் மக்களே! நான் உங்களுக்கு ஒன்றைச் சொல்கிறேன். உங்களுக்கு அது தெரிந்திருக்கும். உலக அளவில் காற்று மாசு அதிகரிப்பதற்கு இந்தியா, சீனா, ரஷ்யா ஆகிய நாடுகள்தான் காரணம். காற்றில் அதிகமான அளவு மாசடைந்த வாயுக்களை இந்த நாடுகள்தான் வெளியேற்றுகின்றன.

ஆனால், அமெரிக்காவைப் பொறுத்தவரை குறைந்த அளவுதான் காற்றில் மாசு வாயுவைக் கலக்கிறது. அதுமட்டுமல்லாமல், சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதிலும், எரிசக்தியிலும் தன்னிறைவு அடைந்துள்ளது. இதுபற்றி என்ன நினைக்கிறீர்கள்?

பிளாஸ்டிக்குக்குப் பதிலாக காகிதத்தை மாற்றுப் பொருளாக மாற்ற முடியும் என்று நினைக்கவில்லை. குளிர்பானம் குடிக்கும் ஸ்ட்ராவுக்குப் பதிலாக காகிதத்தில் குடிக்க முடியுமா? அமெரிக்க வேலை அமெரிக்க மக்களுக்கே வழங்கப்பட வேண்டும்.

டென்னஸி நகரில் ஒரு நிறுவனத்தின் தலைவர் அமெரிக்கப் பணியாளர்களை மாற்றி வெளிநாட்டினரை வேலைக்கு அமர்த்தினார். அந்த நிறுவனத்தின் தலைமைக்கு நான்விடுத்த எச்சரிக்கைக்குப் பின், மீண்டும் அமெரிக்க மக்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர்''.

இவ்வாறு அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவித்தார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE