லண்டன் அரண்மனை ஊழியருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து, அரண்மனையை விட்டு ராணி எலிசபெத் வெளியேறியதாகக் கூறப்படுகிறது.
உலகையே ஆட்டிப் படைத்து வரும் கரோனா, லண்டனையும் கதிகலங்க வைத்து வருகிறது. அங்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 233 ஆக அதிகரித்துள்ளது.
இதற்கிடையே பக்கிங்ஹாம் அரண்மனையில் பணியாற்றி வந்த ஊழியர் ஒருவருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டது. இந்நிலையில் 93 வயதான ராணி எலிசபெத் 2, பக்கிங்ஹாம் அரண்மனையில் இருந்து வெளியேறி வின்ட்சர் கோட்டைக்குச் சென்று தங்கியுள்ளார். இதையடுத்து அவரின் அனைத்து அலுவல்களும் ரத்து செய்யப்பட்டுள்ளதாக லண்டன் செய்தி ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
இதுகுறித்து 'தி சன்' வெளியிட்டுள்ள செய்தியில், ''ராணி வின்ட்சர் கோட்டைக்குச் செல்வதற்கு முன்னால் ஊழியருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டது. பக்கிங்ஹாம் அரண்மனையில் சுமார் 500 ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். இதனால் தொற்று பரவல் குறித்து அச்சம் ஏற்பட்டுள்ளது'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும் இதுகுறித்து அரண்மனை நிர்வாகம் கருத்துத் தெரிவிக்க மறுத்துவிட்டது. அரண்மனையில் போதுமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக அதன் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.