முடிவுக்கு வருகிறது வர்த்தகப் போர்? : படிப்படியாக கட்டணங்களைக் குறைப்பதாக அமெரிக்காவுடன் சீனா உடன்பாடு

பீஜிங், ராய்ட்டர்ஸ்

அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையே நடந்து வரும் வாணிபப் போர் முடிவுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, அமெரிக்கப் பொருட்கள் மீதான புதிய வரிவிதிப்புகளை படிப்படியாக குறைக்க சீனா அமெரிக்காவுடன் உடன்பட்டுள்ளதாக சீன வர்த்தக அமைச்சகம் வியாழனன்று தெரிவித்தது.

அமெரிக்க-சீனா இடைக்கால ஒப்பந்தம் டிசம்பர் 15ம் தேதியன்று கையெழுத்திடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, இதில் அமெரிக்காவும் சீன கணினிகள், லேப்டாப்கள், செல்போன்கள் மற்றும் பொம்மைகள் மீதான சுமார் ரூ.150 பில்லியன் டாலர்கள் கட்டணங்களை ரத்து செய்வதாக உறுதி அளித்துள்ளது.

இருநாடுகளுக்கும் இடையே ஒப்பந்தம் என்ற ஒன்று எட்டப்பட்டால் அதில் முக்கியமாக பரஸ்பர வரிவிதிப்புகளைக் குறைப்பது பிரதான அங்கமாகும். அப்போதுதான் முதற்கட்ட வாணிப ஒப்பந்தமே சாத்தியம் என்று சீன வர்த்தக அமைச்சக செய்தித் தொடர்பாளர் காவோ ஃபெங் தெரிவித்தார்.

ஆனால் கட்டணக்குறைப்புக்கான காலவரிசை எதையும் சீனா தெரிவிக்கவில்லை. முதற்கட்டமாக இருநாடுகளும் பரஸ்பர கூடுதல் கட்டண விதிப்புகளை அகற்றுவதற்கான ஒப்பந்தம் இந்த மாதம் பெயர் குறிப்பிடாத இடத்தில் அதிபர் ட்ரம்ப் மற்றும் ஜீ ஜின்பிங்கிற்கும் இடையே நடைபெறும் என்று இருதரப்புக்கும் நெருக்கமான அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

டிச.3-4 தேதிகளில் நாட்டோ மாநாட்டில் ட்ரம்ப் கலந்து கொள்ள வரும்போது இருதலைவர்களும் இந்த முதற்கட்ட ஒப்பந்தத்தை மேற்கொள்ள வாய்ப்பிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE