மொரீஷியஸ் நாடாளுமன்ற தேர்தலில் முன்னாள் அதிபர் அனிரூத் ஜகநாத் (84) தலைமையிலான எதிர்க்கட்சி கூட்டணி அமோக வெற்றி பெற்றுள்ளது. மொத்தமுள்ள 62 நாடாளுமன்ற தொகுதிகளில் ஜகநாத் தலைமையிலான கூட்டணி 47 இடங்களை, அதாவது 4-ல் 3 பங்கு இடங்களை கைப்பற்றியது.
வாக்கு எண்ணிக்கை அங்கு தொடரும் நிலையில் பிரதமர் நவீன்சந்திர ராம்கூலம் தனது தோல்வியை ஒப்புக் கொண்டுள்ளார். தான் மீண்டும் பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட் டால், அதிபரை மக்களே நேரடியாக தேர்ந்தெடுக்கும் வகையில் அரசியல் சாசன திருத்தம் செய்யப் போவதாகவும், தொடர்ந்து அதிபர் தேர்தலில் போட்டியிடப் போவதாகவும் ராம்கூலம் கூறியிருந்தார். இதை அனிரூத் ஜகநாத் கடுமையாக எதிர்த்தார்.
இந்நிலையில் பிரதமர் ராம்கூலம் தலைமையிலான ஆளும் கூட்டணி இத்தேர்தலில் படுதோல்வி அடைந்தது. ராம்கூலமும் தனது தொகுதியில் தோல்வியடைந்து தனது 23 ஆண்டு கால எம்.பி. பதவியை இழந்தார். ஜகநாத் இதற்கு முன் 1982-95, 2000-2003-க்கு இடைப்பட்ட காலங்களில் பிரதமர் பதவியையும், 2003-2012-ல் அதிபர் பதவியையும் வகித்துள்ளார்.
1968-ல் பிரிட்டனிடம் இருந்து சுதந்திரம் பெற்ற மொரீஷியஸை இதுவரை 4 பிரதமர்களே ஆட்சி செய்துள்ளனர். ராம்கூலம், ஜகநாத் ஆகிய இருவரும் 1982 முதல் மாறி மாறி பிரதமர் பதவி வகித்து வருகின்றனர். 2003- 2005-ல் மட்டும் பெரஞ் சர் என்பவர் பிரதமர் பதவி வகித்தார்.
மொரீஷியஸ் விடுதலைப் போராட்டத்தை தலைமையேற்று நடத்திய நவீன்சந்திர ராம்கூலத்தின் தந்தை சீவூசாகர் ராம்கூலம் 1982-வரை அந்நாட்டின் பிரதமராக இருந்தார்.