பர்கூர் அரசு பழங்குடியினர் உண்டு உறைவிட பள்ளியில் போதிய ஆசிரியர்கள் இல்லாததால் மாணவர்களின் படிப்பு பாதிப்பு

By எஸ்.கோவிந்தராஜ்

பர்கூர் அரசு பழங்குடியினர் உண்டு உறைவிட மேல்நிலைப்பள்ளியில், 380 மாணவர்கள் படிக்கும் நிலையில், தமிழ் மற்றும் ஆங்கில மொழிப்பாடத்துக்கு தலா ஒரு ஆசிரியர் மட்டுமே பணியில் இருப்பதால் மாணவர்களின் படிப்பு பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.

ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே உள்ள பர்கூரில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின், பழங்குடியினர் உண்டு உறைவிட மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில், 6-ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை, 380 மாணவ, மாணவிகள் படிக்கின்றனர். மலைப்பகுதியில் அமைந்துள்ள பள்ளி என்பதால் தொடக்கக் காலம் முதல் இப்பள்ளியில் ஆசிரியர் பற்றாக்குறை தொடர்ந்து வருகிறது. தற்போது, இப்பள்ளியில், 11 வகுப்புகள் செயல்பட்டு வரும் நிலையில், 380 மாணவர்களுக்கும், ஒரு தமிழாசிரியர் மற்றும் ஒரு ஆங்கில ஆசிரியர் மட்டுமே பணியில் உள்ளனர். இதனால், மாணவர்களின் கல்வி பாதிக்கப்பட்டுள்ளது.

இப்பள்ளியில் உள்ள மாணவர்களின் எண்ணிக்கை அடிப்படையில் 10 ஆசிரியர் பணியிடங்களும், ஆசிரியர் அல்லாத 5 பணியிடங்களும் உருவாக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால், அப்பணியிடங்கள் உருவாக்கப்படவில்லை. மேலும், வகுப்பறைகளுக்கு பற்றாக்குறை நிலவும் நிலையில், கடந்த 2017-ம் ஆண்டு திறக்கப்பட்ட புதிய கட்டிடத்துக்கும் பள்ளி மாற்றப்படவில்லை.

இதுகுறித்து சுடர் தொண்டு நிறுவன இயக்குநர் நடராஜ் கூறியதாவது:

தமிழகம் முழுவதும் ஆதிதிராவிடர் பழங்குடியினர் நலத்துறை மூலம் நடத்தப்படும் 320 பள்ளிகளிலும், ஆசிரியர் பற்றாக்குறை, அடிப்படை கட்டமைப்பு வசதி இல்லாதது போன்ற அவலங்கள் தொடர்ந்து வருகின்றன.

அமலுக்கு வராத அறிவிப்பு

இதில், பர்கூர் அரசு பழங்குடியினர் உண்டு உறைவிட மேல்நிலைப் பள்ளியும் ஒன்று. இப்பிரச்சினைக்குத் தீர்வு காணும் வகையில், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் கீழ் உள்ள பள்ளிகள், பள்ளிக்கல்வித்துறையின் கீழ் கொண்டு வரப்படும் என கடந்த பட்ஜெட் கூட்டத்தில் அறிவிப்பு வெளியானது. ஆனால், அந்த அறிவிப்பு இதுவரை செயல்பாட்டுக்கு வரவில்லை.

கல்வி வாய்ப்பு மறுக்கப்படும் ஆதிதிராவிடர், பழங்குடியின மாணவர்களுக்கு, தரமான கல்வி அளித்தால் மட்டுமே, உயர்கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் அவர்களுக்கான பங்கை பெற முடியும். எனவே, பழங்குடியினர் நலத்துறை பள்ளிகளை பள்ளிக்கல்வித்துறையின் கீழ் கொண்டு வந்து, போதுமான ஆசிரியர் பணியிடங்களை உருவாக்கி அவற்றை உடனடியாக நிரப்ப தமிழக முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

20 mins ago

இந்தியா

57 mins ago

தமிழகம்

2 hours ago

விளையாட்டு

2 hours ago

தமிழகம்

3 hours ago

இந்தியா

3 hours ago

வாழ்வியல்

3 hours ago

இந்தியா

3 hours ago

க்ரைம்

3 hours ago

கல்வி

4 hours ago

இந்தியா

4 hours ago

ஓடிடி களம்

5 hours ago

மேலும்