தொடர்கள்

முத்துக்கள் 10: கண்டங்களின் நகர்வை உலகிற்கு நிரூபித்தவர்

செய்திப்பிரிவு

ஜெர்மனி நாட்டு ஆராய்ச்சியாளரும், கண்டங்களின் பெயர்ச்சி பற்றிய கோட்பாடுகளை வகுத்தவருமான ஆல்ஃபிரெட் வெக்னர் (Alfred Wegener) பிறந்த தினம் இன்று (நவம்பர் 1). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் 10:

# ஜெர்மனி தலைநகர் பெர்லினில் (1880) பிறந்தார். தந்தை மொழி ஆசிரியர், பாதிரியாராக இருந்தவர். ஆதரவற்றோர் விடுதியும் நடத்தி வந்தார். செல்வச் செழிப்பான குடும்பம் என்பதால், இவருக்கு தரமான கல்வி கிடைத்தது. பெர்லினில் ஆரம்பக் கல்வி கற்றார்.

# அறிவுக்கூர்மை உடைய மாணவராகத் திகழ்ந்தார். இயற்பியல், புவி அறிவியலில் அதிக நாட்டம் கொண்டிருந்தார். ஜெர்மனி மற்றும் ஆஸ்திரியப் பல்கலைக்கழகங்களில் இந்த பாடங்களில் பட்டப்படிப்பை முடித்தார். பெர்லின் பல்கலைக்கழகத்தில் 1905-ல் வானியலில் முனைவர் பட்டம் பெற்றார்.

# வளிமண்டலம், பூமியின் காலநிலை மாற்றங்கள் போன்ற ஆய்வுகளில் அதிக ஆர்வம் காட்டினார். இதுதொடர்பாக ஆராய்ச்சியில் ஈடுபட்டு, பயனுள்ள கண்டுபிடிப்புகளை உலகுக்கு வழங்க முடியும் என்று ஆரம்ப காலத்திலேயே மிகுந்த தன்னம்பிக்கை கொண்டிருந்தார்.

# துருவ காலநிலை குறித்த ஆராய்ச்சிகளுக்காக கிரீன்லாந்தில் 1906 முதல் 2 ஆண்டு காலத்துக்கு பயணம் மேற்கொண்டார். இவ்வாறு மொத்தம் 4 முறை இப்பயணத்தை அவர் மேற்கொண்டுள்ளார்.

# முனைவர் பட்டம் பெற்றதும், ஜெர்மனியில் உள்ள மார்பர்க் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகப் பணியாற்றத் தொடங்கினார். அப்போது, பூமியின் கண்டங்கள் குறித்த வரலாற்றில் ஆர்வம் பிறந்தது. அதுபற்றிய ஆராய்ச்சிகளில் இறங்கினார்.

தென் அமெரிக்க கிழக்கு கடற்கரையும், ஆப்பிரிக்காவின் வடமேற்கு கடற்கரையும் ஒருகாலத்தில் இணைந்திருந்ததுபோல தோற்றமளிப்பதைக் கண்டறிந்தார். ‘கண்டங்களின் இடப்பெயர்ச்சி’ என்றதனது கோட்பாட்டை 1912-ல் வெளியிட்டார். இதுதான் பிற்காலத்தில் ‘கண்டப் பெயர்ச்சி’ எனக் குறிப்பிடப்பட்டது.

# முதல் உலகப் போரின்போது 1914-ல்ராணுவத்தில் கட்டாயப்படுத்தப்பட்டு சேர்க்கப்பட்டார். இரண்டு முறை காயமடைந்ததால், ராணுவ வானிலைமுன்னறிவிப்பு சேவையில் பணியமர்த்தப்பட்டார். ‘தி ஆரிஜின் ஆஃப் கான்டினன்ட்ஸ் அண்ட் ஓஷன்ஸ்’ என்ற தனது பிரபலமான கட்டுரையை 1915-ல் வெளியிட்டார். கண்டங்கள் ஒருகாலத்தில் இணைந்திருந்தது பற்றிய தனது விரிவான ஆராய்ச்சி முடிவுகளை இதில் வெளியிட்டார்.

# ஆஸ்திரியாவில் உள்ள கிராஸ் பல்கலைக்கழகத்தில் வானியல், புவி இயற்பியல் பேராசிரியராக 6 ஆண்டுகள் பணிபுரிந்தார். ஜெர்மனியில் ‘ஒட்டுமொத்த நிலப்பரப்பு’ என்று பொருள்படும் பாங்கியா (Pangaea) என்ற சொல்லை, பல கோடி ஆண்டுகளுக்கு முன்பு இருந்த மகா கண்டத்தை (Super Continent) விவரிக்கப் பயன்படுத்தினார்.

# கண்டப் பெயர்ச்சி, மகா கண்டம் குறித்த கோட்பாடுகளை வரையறுப்பதிலேயே வாழ்நாளில் பெரும்பகுதியை செலவிட்டார்.

# வாழ்நாளின் இறுதிக்காலம் வரை ஏறக்குறைய இவரது அனைத்து கோட்பாடுகளும் அறிவியல் சமூகத்தால் நிராகரிக்கப்பட்டே வந்தன. 1960-களில் இவர் மேற்கொண்ட ஆராய்ச்சிகள்தான் உரிய அங்கீகாரம் பெற்றன. இவரது ஆய்வு முடிவுகளை அறிவியல் சமூகம் ஏற்றுக்கொண்டது. இவரும் புகழ்பெறத் தொடங்கினார்.

# கிரீன்லாந்தில் 1930-ல் ஆய்வு நிலையம் அமைப்பதற்காக 14 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டது. அதில் இவரும் இடம்பெற்றார். அங்கிருந்து திரும்பி வந்தபோது, இவர் மாயமானதாகவும், 50-வது வயதில் அங்கேயே மரணமடைந்ததாகவும் நம்பப்படுகிறது.

SCROLL FOR NEXT