காணும் பொங்கலையொட்டி ஒகேனக்கல்லில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்

By செய்திப்பிரிவு

தருமபுரி / அரூர் / கிருஷ்ணகிரி: தருமபுரி மாவட்ட சுற்றுலாத் தலமானஒகேனக்கல்லுக்கு காணும் பொங்கல் தினமான நேற்று சுற்றுலாப் பயணிகள் அதிக அளவில் வருகை தந்தனர்.

தைப் பொங்கல் விழாவையொட்டி கடந்த 14-ம் தேதி முதல் அரசு விடுமுறை அளிக்கப்பட்டது. தொடர் விடுமுறை காரணமாக தருமபுரி மாவட்ட சுற்றுலாத் தலமான ஒகேனக்கல்லுக்கு கடந்த 3 நாட்களாகவே சுற்றுலாப் பயணிகள் அதிக அளவில் வருகை தந்தனர். பொங்கல் விழாவின் இறுதி நாளான காணும் பொங்கல் தினத்தையொட்டி நேற்று ஒகேனக்கல்லில் மக்கள் குவிந்தனர்.

பிரதான அருவியின் ஆண்கள் மற்றும் பெண்கள் குளிக்கும் பகுதிகளில் அதிக அளவில் கூட்டம் காணப்பட்டது. சுற்றுலாப் பயணிகள் வருகை காரணமாக மீன் வறுவலுடன் பெண்கள் உணவு சமைத்துத் தரும் சமையல் கூடங்கள் நேற்று பரபரப்பாக இயங்கின. அதேபோல, ஒகேனக்கல் பகுதியில்உள்ள கடைகள், ஓட்டல்கள், தள்ளுவண்டி கடைகள், சாலையோரக் கடைகள் ஆகியவற்றிலும் பரபரப்பாக வர்த்தகம் நடந்தது.

மேலும், சுற்றுலாப் பயணிகள் பரிசலில் பயணித்து காவிரியாற்றின் பல்வேறு பகுதிகளை ரசித்திட அதிக ஆர்வம் காட்டினர். அதேநேரம், ஒகேனக்கல் காவிரியாற்றில் நீர்வரத்து தற்போது விநாடிக்கு 2,000 கனஅடி என்ற நிலைக்கு சரிந்துள்ளது. எனவே, வழக்கமாக பரிசல் இயக்கும் வழித்தடங்களில் பரிசல் இயக்க முடியாமல் கோத்திகல், மணல்திட்டு போன்ற வழித்தடங்களில் மட்டுமே பரிசல் இயக்கும் நிலை உள்ளது.

இதற்காக, பரிசல் துறையில் இருந்து குறிப்பிட்ட பகுதி வரை நடந்து சென்ற பின்னரே சுற்றுலாப் பயணிகள் பரிசலில் செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. சூழல் காரணமாக குறைந்த பகுதிகளை மட்டுமே பரிசலில் சென்று ரசிக்கும் நிலை இருக்கும்போது, கட்டணம் மட்டும் வழக்கம்போலவே வசூலிக்கப்படுவதாக அவர்கள் வேதனை தெரிவித்தனர்.

ஒகேனக்கல்லை போலவே, பென்னாகரம் வட்டம் ஏரியூர் அடுத்த நாகமரை, காரிமங்கலம் வட்டம் இருமத்தூர் தென்பெண்ணை ஆற்றங்கரை ஆகிய இடங்களுக்கும் காணும் பொங்கல் தினமான நேற்று சுற்றுலாப் பயணிகள் அதிக அளவில் வருகை தந்தனர்.

விளையாட்டுப் போட்டிகள்: அரூர் பகுதியில் காணும் பொங்கலையொட்டி கிராமங்களில் பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன. சைக்கிள் போட்டி, கபடி, வழுக்கு மரம் ஏறுதல் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு விழாக்குழு சார்பில் பரிசுகள் வழங்கப்பட்டன. இதில் உள்ளூர் தவிர வெளியூரில் இருந்து வந்திருந்த விருந்தினர்களும் உற்சாகமாக பங்கேற்றனர்.

அரூர் பகுதியில் கரிநாளை முன்னிட்டு அனைத்து இறைச்சி கடைகளிலும் நேற்று விற்பனை அதிகரித்திருந்தது. அரூர், பாப்பிரெட்டிப்பட்டி, பொம்மிடி, கடத்தூர், கம்பை நல்லூர் உள்ளிட்ட பகுதிகளில் அதிகாலை முதலே ஆடு, கோழி, மீன் இறைச்சிக் கடைகளில் விற்பனை களைகட்டியிருந்தது. இறைச்சி விலை உயர்ந்தி ருந்தாலும் விற்பனை பாதிக்காமல் இருந்ததாக வியாபாரிகள் மகிழ்ச்சி தெரிவித்தனர்.

கிருஷ்ணகிரியில் உற்சாகம்: காணும் பொங்கலான நேற்று கிருஷ்ணகிரி அடுத்த கேஆர்பி அணைப் பூங்கா, படகு சவாரி செயல்படுத்தப்படும் அவதானப்பட்டி ஏரி ஆகிய இடங்களில் அதிக அளவிலான மக்கள் வருகை தந்தனர். குறிப்பாக, சிறுவர், சிறுமியர் உள்ள குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் குடும்பத்துடன் வந்து குழந்தைகளை விளையாடச் செய்தும், பல்வேறு இடங்களை பார்த்து ரசிக்கச் செய்தும் மகிழ்ந்தனர்.

அதிக மக்கள் வருகை தரும் இடங்கள் என பட்டியலிடப்பட்ட பகுதிகளில் கூட்ட நெரிசல், போக்குவரத்து நெரிசல், திருட்டு உள்ளிட்ட அசம்பாவிதங்களை தவிர்க்கும் வகையில் போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப் பட்டனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

3 hours ago

வணிகம்

5 hours ago

விளையாட்டு

5 hours ago

தொழில்நுட்பம்

6 hours ago

சினிமா

7 hours ago

க்ரைம்

7 hours ago

விளையாட்டு

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

இந்தியா

8 hours ago

க்ரைம்

8 hours ago

மேலும்