பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து ஜூலை 5-ம் தேதி தேமுதிக சார்பில் அனைத்து மாவட்ட ஆட்சியர் அலுவலகங்கள் முன்பும் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று அக்கட்சியின் தலைவர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
பெட்ரோல், டீசல் விலை உயர்வு, ஹைட்ரோ கார்பன் திட்டத்தைக் கண்டிப்பதோடு, இவற்றைக் கைவிட மத்திய அரசை வலியுறுத்தியும், கரோனா தொற்று உள்ள நிலையில் தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் திறப்பு, கட்டுமானப் பொருட்கள், அத்தியாவசிய பொருட்கள் விலை உயர்வு, மின்சாரப் பிரச்சினை இவற்றைக் கண்டித்தும், தேமுதிக சார்பில் தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்ட ஆட்சியர் அலுவலகங்கள் முன்பும் ஜூலை 5-ம் தேதி காலை 10 மணிக்கு காவல் துறை அனுமதியுடன் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.