தென்காசி திமுக பொறுப்பாளர் மீது கொலை மிரட்டல் புகார் :

இடப்பிரச்சினையில் கொலை மிரட்டல் விடுப்பதாக, தென்காசி வடக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் மீது பெண் ஒருவர் புகார் அளித்துள்ளார்.

கடையநல்லூர் அருகே உள்ள கம்பனேரி புதுக்குடி கிராமத்தைச் சேர்ந்த சாகுல் ஹமீது என்பவரது மனைவி மைதீன் பாத்து (50). இவர், தனது குடும்பத்தினருடன் தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று புகார் மனு அளித்தார். அதில், ‘எனது கணவருக்கு கம்பனேரி புதுக்குடியில் 3 ஏக்கர் 44 சென்ட் இடம் உள்ளது. இந்த இடத்துக்கு அருகில், தென்காசி வடக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் செல்லத்துரைக்கு சொந்தமான இடம் உள்ளது. எங்கள் இடத்தை விலைக்கு கேட்டு செல்லத்துரை தொந்தரவு செய்து வந்தார்.

இந்நிலையில், எங்கள் இடத்தின் வழியாக தண்ணீர் குழாய் பதிக்க வேண்டும் என்று கேட்டார். அதற்கு நான் மறுத்துவிட்டதால், கடந்த சில நாட்களுக்கு முன்பு செல்லத்துரை, அவரது தந்தை மாடசாமி, உறவினர் சுரேஷ் ஆகியோர், எங்கள் இடத்தில் அத்துமீறி பள்ளம் தோண்டி தண்ணீர் குழாய் பதிக்க முயன்றனர். நான் அதைத் தடுத்ததால் அவர்கள் 3 பேரும் சேர்ந்து கொலை மிரட்டல் விடுத்தனர். அவர்கள் மீது நடவடிக்கை எடுத்து, எனக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும்’ என்று கூறியுள்ளார்.

இதுகுறித்து, செல்லத்துரை கூறும்போது, “அந்த சொத்தை 20 ஆண்டுகளுக்கு முன்பு எனது தந்தை வாங்கியுள்ளார். இதற்கான ஆவணம் எங்களிடம் உள்ளது. உங்களுக்கு இடம் இருந்தால் முறையாக சர்வே செய்து எடுத்துக்கொள்ளுங்கள் என்று, மைதீன் பாத்துவிடம் பல முறை கூறியுள்ளேன்.

என் மீது அளிக்கப்பட்ட புகார் மனு மீது விசாரணை நடத்தி, யார் மீது தவறு உள்ளது என்பதை அறிந்து, அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கேட்டுக்கொள்கிறேன்” என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE