தோட்டத்தில் அறுந்து கிடந்த மின் கம்பியிலிருந்து : மின்சாரம் பாய்ந்து தந்தை, மகன் உயிரிழப்பு :

ஈரோடு: சத்தியமங்கலம் அருகே தோட்டத்தில் பூ பறிக்கச் சென்ற தந்தை - மகன் மின்சாரம் பாய்ந்ததில் உயிரிழந்தனர்.

சத்தியமங்கலம் அடுத்த சிவியார்பாளையத்தைச் சேர்ந்தவர் மகேந்திரன் (50). விவசாயி. இவரது மகன் கவின் பிரகாஷ் (24). இவர் கல்லூரி படிப்பை முடித்து தந்தையுடன் இணைந்து விவசாயம் செய்து வந்தார். மகேந்திரனுக்கு அதே பகுதியில் சொந்தமாக விவசாயத் தோட்டம் உள்ளது.

சத்தியமங்கலம் பகுதியில் நேற்று முன்தினம் லேசான மழை பெய்திருந்தது. இந்நிலையில் நேற்று அதிகாலை மகேந்திரன் தனது தோட்டத்திற்கு சம்பங்கிப் பூ பறிக்கச் சென்றார். அப்போது, தோட்டத்தின் நடுவே சென்ற மின் கம்பி அறுந்து விழுந்ததைக் கவனிக்காமல், சென்ற மகேந்திரன் அதனை மிதித்துள்ளார்.

இதில் மின்சாரம் பாய்ந்து அவர் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே இறந்தார். நீண்ட நேரமாக தந்தை வீட்டுக்கு வராததால், அவரைத் தேடி மகன் கவின் பிரகாஷ் தோட்டத்திற்கு சென்றுள்ளார். இறந்து கிடந்த தந்தையை அவர் தொட்டு தூக்கியபோது, அவர் மீதும் மின்சாரம் பாய்ந்தது. இதில் சம்பவ இடத்திலேயே அவர் இறந்தார். மின்சாரம் பாய்ந்து தந்தை - மகன் இறந்த சம்பவம் குறித்து சத்தியமங்கலம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE