Regional01

தமிழகத்தில் தொழில்கல்வி படிப்புகளில் - அரசுப் பள்ளி மாணவர் சேர்க்கையை ஆய்வு செய்ய ஆணையம் அமைப்பு : ஒரு மாதத்தில் அறிக்கை அளிக்க அரசு உத்தரவு

செய்திப்பிரிவு

தொழில் கல்வி படிப்புகளில் அரசுப் பள்ளி மாணவர்களின் சேர்க்கை அளவை ஆய்வுசெய்து பரிந்துரை செய்ய ஓய்வுபெற்ற நீதிபதி முருகேசன் தலைமையில் ஆணையம் அமைத்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் இளநிலை மருத்துவப் படிப்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத உள்ஒதுக்கீடு வழங்கி கடந்த ஆண்டு தமிழக அரசு உத்தரவிட்டது. இதனால், சுமார் 400 மாணவர்கள் பயன் அடைந்தனர்.

இதேபோல், பொறியியல் உள்ளிட்ட படிப்புகளிலும் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு தனி இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று தொடர் கோரிக்கைகள் வைக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், தொழில்கல்வி படிப்புகளில் அரசுப் பள்ளி மாணவர்களின் சேர்க்கை அளவை ஆய்வு செய்து பரிந்துரை வழங்குவற்காக ஆணையம் ஒன்றை தமிழக அரசு அமைத்துள்ளது. இதுகுறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட அறிவிப்பு:

கடந்த 2020-21-ம் கல்வியாண்டில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மருத்துவப் படிப்புக்கான மாணவர் சேர்க்கையில் 7.5 சதவீதம் இடஒதுக்கீடு அளிக்கப்பட்டது.

அரசுக்கு கோரிக்கை

இதையடுத்து அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் பொருளாதார நிலை, அதனால் அவர்கள் சந்திக்கக்கூடிய இடர்பாடுகள் மற்றும் கடந்த ஆண்டுகளில் பல்வேறு தொழிற்கல்வி நிறுவனங்களில் அந்த மாணவர்களின் சேர்க்கை எவ்வாறு உள்ளது என்பதை ஆய்வு செய்ய வேண்டி உள்ளது.

அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் சேர்க்கை தொழில் கல்விகளான பொறியியல், வேளாண்மை, கால்நடை, மீன்வளம், சட்டம் போன்ற படிப்புகளில் குறைந்த அளவில் இருப்பின், அதை சரிசெய்வதற்கு எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து பரிந்துரை செய்ய ஓய்வுபெற்ற நீதிபதி த.முருகேசன் தலைமையில் ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த ஆணையம், தனது பரிந்துரை அறிக்கையை ஒரு மாதத்துக்குள் அரசுக்கு அளிக்கும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT