சட்டவிரோத மது விற்பனையை தடுக்க முயன்ற - போலீஸாரை தாக்கிய 11 பேர் சிறையிலடைப்பு :

By செய்திப்பிரிவு

சட்ட விரோத மது விற்பனையை தடுக்க முயன்ற போலீஸாரை தாக்கியதாக 11 பேரை போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

முழு ஊரடங்கையொட்டி தமிழகம் முழுவதும் உள்ள மதுக்கடைகள் மூடப்பட்டுள்ளது. இதையடுத்து சில இடங்களில் சட்ட விரோத மது பாட்டில் விற்பனை நடைபெறுவதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதேபோல், சென்னை ஓட்டேரி எஸ்.எஸ்.புரம் பகுதியில் சட்ட விரோத மது விற்பனை நடைபெறுவது தெரியவந்தது. தகவல் அறிந்து தலைமைச் செயலக குடியிருப்பு காவல் நிலைய உதவி ஆய்வாளர்கள் சஜீபா, மணிவண்னன், காவலர் சங்கர் ஆகியோர் சம்பவ இடத்துக்கு சென்று விசாரித்தனர்.

அப்போது, சட்ட விரோதமாக மதுபானம் விற்பனை செய்ததாக சேகர் என்பவரை பிடித்து விசாரித்தனர். அப்போது, அவருக்கு ஆதரவாக அவரது உறவினர்களும் அப்பகுதியைச் சேர்ந்த சிலரும் திரண்டனர். அவர்கள் போலீஸாரின் விசாரணைக்கு எதிர்ப்பு தெரிவித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். திடீரென சூழ்ந்து கொண்டு போலீஸாரை தாக்கி விட்டு தலைமறைவாகினர். தகவல் அறிந்து தலைமைச் செயலக குடியிருப்பு போலீஸார் சம்பவ இடம் விரைந்தனர்.

காயம் அடைந்த உதவி ஆய்வாளர் சஜீபா உட்பட 3 போலீஸாரையும் சிகிச்சைக்காக அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து விசாரணை நடத்தினர். முதல் கட்டமாக தலைமறைவாக இருந்த ஓட்டேரி, எஸ்.எஸ்.புரத்தைச் சேர்ந்த கற்பகம், காஞ்சனா , செல்வி, நந்தினி, மோனிஷா, ரோஸ்லின் என 9 பெண்கள் உட்பட 11 பேரை போலீஸார் கைது செய்து நீதிமன்ற காவலில் சிறையில் அடைத்தனர். தொடர்ந்து விசாரணை நடக்கிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE